'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால்'.. சட்டசபையில் பாட்டு பாடி பதிலளித்த முதல்வர் பழனிச்சாமி!
சென்னை: தமிழகத்தில் ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் எம்எல்ஏ எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாட்டுபாடி பதில் அளித்தார்.
காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் இன்று தொடங்கியது. அப்போது உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு காவல்துறையை கையில் வைத்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி விளக்கம் அளித்தார்.
அப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், காவலர்களுக்கு சொந்த வீடு திட்டத்தின் கீழ் கோட்டையூரில் 40 ஏக்கரில் 2 ஆயிரதது 673 வீடுகள் கட்டப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டததை 120 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்த அரசு திட்டமிட்டுள்ளது. காவலர்களுக்கு பல்வேறு சிறப்பு திட்டங்களை வழங்கிய அரசு 'அதிமுக அரசு என்றார்.
துணிச்சலாக அதிகாரிகள்
சட்டம் ஒழுங்கு குறித்து பேசுகையில் இந்தியாவிலேயே சிறந்த காவல்துறை தமிழ்நாடு காவல்துறை தான் என சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெருமிதம் தெரிவித்தார். "இங்கு சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது. யார் தவறு செய்தாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதன்படிதான் அதிமுக அரசு செயல்படுகிறது. அச்சுறுத்தல் வரும் போது துணிச்சலாக அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர்" என்றார்.
ஆண்டுக்கு 4 வழக்குகள்
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு குறித்து முதல்வர் பேசுகையில், "சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. பொன்மாணிக்கவேல் பொறுப்பேற்றதிலிருந்து 31 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13 வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் 7 பேர் தண்டனை பெற்றுள்ளனர். 4பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அவரது பதவி காலத்தில் ஆண்டுக்கு 4 வழக்குகள் தான் பதிவு செய்யப்படுகிறது" என்றார்.
நீதிமன்றத்தில் ஆஜர்
கொடநாடு விவகாரம் குறித்து அவதூறு பேசியவர் மீது நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தோம். ஆனால் அவர்களுக்கு ஜாமின் கொடுத்தது திமுகவைச் சேர்ந்தவர்தான் என்றார்.
காங்கிரஸ் எம்எல்ஏ கேள்வி
முன்னதாக தமிழகத்தில் ஜெயின் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ ராமசாமி சட்டசபையில் இன்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திருடனாய் பார்தது திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று பாட்டுபாடி பதில் அளித்தார்.