முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அதிரடிக்கு மாறிய முதல்வர் பழனிச்சாமி.. சிக்கிய மணிகண்டன்
Recommended Video
சென்னை: முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அதிரடிக்கு மாறியுள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை நீக்கியதன் மூலம் கட்சி மற்றும் ஆட்சியில் அதிகாரத்தை நிலைநாட்டிய பிறகு முதல்முறையாக அமைச்சரவையில் மாற்றம் செய்துள்ளார்.
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக இதுவரை எந்த ஒரு அமைச்சர் மீதும் நடவடிக்கை எடுத்ததில்லை.
முதலில் கட்சி மற்றும் ஆட்சியை தன் கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர முயற்சித்தார். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றார். சட்டசபை இடைத்தேர்தலில் வென்று முதல்வர் பதவியை தக்கவைத்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக ஆட்சி அதிகாரம் முதல்வர் பழனிச்சாமியின் கட்டுப்பாட்டுக்கு வந்துள்ளது.
தலைப்பாகை கட்டி.. வேட்டியை மடிச்சுக் கட்டி... மண்வெட்டியைத் தூக்கி.. அசத்திய முதல்வர் பழனிச்சாமி!
இந்நிலையில் ஆரம்ப காலத்தில் சசிகலாவின் தீவிர ஆதரவாளராக இருந்த மணிகண்டன் பின்னர் அதிமுக உடைந்த பின் எடப்பாடிக்கு ஆதரவாக மாறினார். கடந்த 3 ஆண்டுகளாக தகவல்தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தார். திருவாடணை தொகுதியில் மணிகண்டனுக்கும் கருணாஸ்க்கும் இடையே தகராறு நிலவிவருவதாக கூறப்படுகிறது.
அத்துடன் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுடன் அமைச்சர் மணிகண்டன் மோதலில் ஈடுபட்டு வந்தாராம். கேபிள் டிவி கார்ப்பரேசன் தலைவராக உள்ள உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு 2லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளதாகவும் அதை ஏன் அரசு கேபிளில் இணைக்க வேண்டும் என்றும் ஊரெல்லாம் கேபிளை இணைக்க கூறும் அவர் இதை செய்து முன்னுதாரணம் ஆகலாமே என்றும் மணிகண்டன் பேசினார்.
இத்துடன் முதல்வர் கேபிள் கட்டணத்தை குறைப்பது பற்றி அந்ததுறையின் அமைச்சரான தன்னுடன் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை என்று கூறினார். இவரது பேட்டிகளை பார்த்த முதல்வர் பழனிச்சாமி நேற்று இரவு அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை அதிரடியாக நீக்கினார். இது தொடர்பாக முதல்வர் பழனிச்சாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டனை தகவல் தொழில்நுட்ப் துறை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி ஆளுநர் உத்தரவிட்டார். இத்துடன் வருவாய்துறை அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தகவல் தொழில்நுட்ப துறையை கூடுதாக கவனிப்பார் என்றும் ஆளுநர் மாளிகை தெரிவித்துள்ளது.
முதல்வர் பழனிச்சாமி இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளில் அமைச்சர்கள் மீது பெரிதாக எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை. முதல்முறையாக ஜெயலலிதா வழியில் அமைச்சர் பதவியில் இருந்து மணிகண்டனை உடனே தூக்கியருப்பது பலரையும் அதிரவைத்துள்ளது. இந்த நடவடிக்கையை கண்டு அதிமுகவினர், முதல்வர் பழனிச்சாமி தனது கட்டுப்பாட்டிற்கு கீழ் ஆட்சி அதிகாரத்தை கொண்டுவந்துவிட்டார் என்கிறார்கள்.