இன்னும் 4 நாட்களில் டெல்லி செல்லும் முதல்வர்.. மோடி, அமித் ஷாவை சந்திக்கிறார்.. 3 முக்கிய காரணங்கள்
தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார்.
சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார். டெல்லியில் அவர் முக்கியமான மூன்று விஷயங்கள் குறித்து பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் ஆலோசனை நடத்த உள்ளார்.
தமிழகத்தில் பாஜக அதிமுக இடையில் மிகவும் வலிமையான கூட்டணி நிலவி வருகிறது. லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் மத்திய அரசு தாக்கல் செய்யும் அனைத்து மசோதாக்களை அதிமுக கட்சி ஆதரித்து வருகிறது.
தமிழகத்தில் பலரின் எதிர்ப்பை மீறியும் அதிமுக கட்சி ராஜ்ய சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரித்தது. இந்த நிலையில்தான் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்ல இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்தில் மீண்டும் திருத்தம் வருகிறது... அமித் ஷா சூசகம்
பயணம்
வரும் 19-ம் தேதி டெல்லி செல்லும் முதல்வர் பழனிசாமி அன்று மதியம் பிரதமர் மோடியை சந்திக்கிறார். அதன்பின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்கிறார். இவர்கள் மூவரும் ஒன்றாக பின் முக்கிய ஆலோசனை செய்ய உள்ளனர். இதில் அமித் ஷாவின் உள்துறை அமைச்சக ஆலோசகர் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் பங்கேற்க உள்ளார்.
என்ன பேசுவார்கள்
குடியுரிமை சட்ட திருத்தத்தை எப்படி தமிழகத்தில் அமல்படுத்துவது என்று இதில் ஆலோசிக்க உள்ளனர். இது மத்திய அரசின் சட்டம், ஆனாலும் மாநில அரசின் உதவி இன்றி இதை செயல்படுத்துவது கடினம். அதனால் தமிழக முதல்வர் பழனிசாமியிடம் இது தொடர்பாக அமித் ஷா ஆலோசிக்க உள்ளார். அதேபோல் என்ஆர்சி குறித்தும் இதில் பேசுவார்கள்.
என்ஆர்சி எப்படி
ஆம் என்ஆர்சி எனப்படும் தேசிய குடியுரிமை பட்டியலை அசாமை தொடர்ந்து இந்தியா முழுக்க கொண்டு வர பாஜக முயன்று வருகிறது. இதை தமிழகத்தில் எப்படி கொண்டு வருவது என்று பாஜக ஆலோசிக்க உள்ளது. இது தொடர்பாக முதல்வர் பழனிசாமியும் அமித் ஷாவும் ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது.இது தொடர்பாக வேறு சில மாநில முதல்வர்களையும் அமித் ஷா விரைவில் சந்திக்க உள்ளார்.
அடுத்த காரணம்
இரண்டாவதாக உள்ளாட்சி தேர்தல் குறித்தும் பேச இருக்கிறார்கள். இந்த ஆலோசனையின் போது பாஜகவின் தேசிய செயல் தலைவர் ஜே பி நட்டா கலந்து கொள்கிறார். இதில் உள்ளாட்சி தேர்தல் குறித்தும், கூட்டணி குறித்தும் ஆலோசிக்க உள்ளார். இந்த ஆலோசனைக்கு பின் தமிழக முதல்வர் கூட்டணி கட்சிகளுக்கான பதவி ஒதுக்கீடு குறித்து அறிவிப்பார் என்கிறார்கள்.
நிதி ஒதுக்கீடு
இறுதியாக தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்க கோரியும் இதில் முதல்வர் பழனிசாமி கோரிக்கை வைக்க இருக்கிறார். வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவில் குவிந்து வருகிறது. இதனால் புதிய சில திட்டங்களை செயல்படுத்த நிதி வேண்டும், உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உள்ளாட்சி திட்டங்களை செயல்படுத்த நிதி வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடியிடம் கோரிக்கை வைக்க இருக்கிறார்.