முதல்வர் எடப்பாடியின் சுதந்திரதின பேச்சை சாதாரணமாக கடந்து போனீங்களா.. கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பாருங்க
சென்னை: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நேற்றைய சுதந்திர தின உரையை சாதாரணமாகக் கடந்து சென்று இருந்தால், கொஞ்சம் ரீவைண்ட பண்ணி பாருங்கள். ஏனெனில் அந்த உரையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அரசை மறைமுகமாக எச்சரித்துள்ளார்.
நாட்டின் 73 வது சுதந்திர தினம் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
நேற்று கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சுதந்திர தின உரையில் வேலூர் மாவட்டத்தை மூன்று மாவட்டமாக பிரித்து அறிவித்தார். இன்னும் இரண்டு முக்கியமான விஷயங்களை அவர் பேசினார்.
முதல்வரின் சுதந்திர தின உரை
இருமொழி கொள்கையில் உறுதியாக இருப்பதாக கூறிய முதல்வர், தமிழகத்தில் இந்தியை திணிக்க அனுமதிக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார். அத்துடன் மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கும் என்றும் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எச்சரிக்கை
இந்தி மொழியை தமிழகத்தில் மூன்றாவது மொழியாக கொண்டு வர மத்திய அரசு விரும்பும் நிலையில், இரண்டு மொழி தான் இங்கு என்று எடப்பாடி உறுதியான முறையில் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார். அத்துடன் இந்தியை தமிழகத்தில் திணிக்க அனுமதிக்க முடியாது என்பதை கூறி மறைமுகமாக தனது உரையின் மூலம் மத்திய அரசை எச்சரிக்கும் வகையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக அரசு எதிர்க்கும்
இத்துடன் மக்கள் நலனுக்கு எதிரான எந்த திட்டமாக இருந்தாலும் எதிர்ப்பு தெரிவித்து மக்களை பாதுகாப்பதில் முன்னோடி மாநிலமாக தமிழகம் இருக்கும் என்று முதல்வர் பழனிச்சாமி கூறியதில் ஒரு விஷயம் தெளிவாக புரிகிறது. மாநிலத்தில் திட்டங்களை மத்திய அரசு கொண்டுவரும்போது அது மக்கள் நலனுக்கு எதிராக இருந்தால் அதை ஏற்க மாட்டோம் என்றும் அத்திட்டத்தை நிச்சயம் தமிழக அரசு எதிர்க்கும் என்பதை தெளிவாக முதல்வர் கூறியுள்ளார். இதையும் மத்திய அரசுக்கு முதல்வர் விடுத்த எச்சரிக்கையாக பார்க்க வேண்டியுள்ளது.
எடப்பாடி கடும் பதிலடி
அண்மையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம், தமிழக அரசை கலைத்தாலோ அல்லது மாநிலத்தை பிரித்து யூனியன் பிரதேசமாக அறிவித்தாலும் ஆளும் அதிமுக எதிர்க்காமல் அமைதியாக இருக்கும் என்று பேசியிருந்தார். இதற்கு முதல்வர் கடுமையாக பதிலடி கொடுத்தார். அடுத்த நாளிலேயே முதல்வர் பழனிச்சாமி தமிழகத்துக்கு எதிரான எதையும் எதிர்ப்போம் என்பதை சுதந்திர தின உரையில் தெளிவாக சொல்லியிருக்கிறார்.