ஆதி திராவிடர் உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம்.. குழு அமைத்தார் முதல்வர்
சென்னை: பள்ளர் உட்பட ஆதிதிராவிடர் பிரிவில் உள்ள 6 உட்பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்ய தமிழக அரசு குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.
ஆதி திராவிட இனத்தில் உள்ள ஆறு உட் பிரிவுகளையும் ஒன்றாக இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று ஒரே பெயரில் அழைக்கவேண்டும் என்ற கோரிக்கை, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமியால் முன் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த கோரிக்கையை பரிசீலிப்பது தொடர்பாக, ஆய்வு செய்ய ஐஏஎஸ் அதிகாரி ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமையில் குழு அமைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய கட்சியுடன்தான் கூட்டணி அமைக்கப் போவதாகவும், அதுவரை காத்திருக்க போவதாகவும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி நேற்று கூறியிருந்தார். இந்த நிலையில் இன்று முதல்வர் இவ்வாறு ஒரு குழுவை அமைத்துள்ளது கவனிக்கத் தக்கதாக உள்ளது.