லோக் ஆயுக்தா தேடுதல் குழு.. ஓய்வுபெற்ற நீதிபதி தலைவராக நியமனம்!
லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை: லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். லோக் ஆயுக்தா தேடுதல் குழு இனி லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த தமிழக சட்டசபை கூட்டதொடரில் லோக் ஆயுக்தா மசோதா வெற்றிகரமாக தாக்கல் செய்யப்பட்டது. இதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டது. முதல்வர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் அடங்கிய தேர்வுக்குழு இதற்காக உருவாக்கப்பட்டது.
இந்த நிலையில் இதற்கான உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணியில் லோக் ஆயுக்தா தேர்வு குழு மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இதற்கான கூட்டம் தற்போது தலைமை செயலகத்தில் நடந்தது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சபாநாயகர் தனபால் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுனர்.
இந்த குழுவின் உறுப்பினராக திமுக தலைவர் ஸ்டாலின், கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் ஏற்கனவே கடிதம் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். லோக் ஆயுக்தா சட்டம் வலுவில்லாமல் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் கலந்து கொள்ள மறுப்பு தெரிவித்தார்.
இதையடுத்து இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. லோக் ஆயுக்தாவின் தலைவர் மற்றும் மற்ற உறுப்பினர்களை தேர்வு செய்ய குழு நியமிப்பது தொடர்பாக விவாதம் நடத்தினார்கள். மூன்று மணி நேரம் இந்த விவாதம் நடந்தது.
ஆலோசனை கூட்டத்தில் சபாநாயகர் தனபால் கலந்து கொண்டார். சில அதிகாரிகள், ஐஏஎஸ்களும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் லோக் ஆயுக்தா தேடுதல் குழு தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி வெங்கட்ராமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த லோக் ஆயுக்தா தேடுதல் குழுதான் இனி லோக் ஆயுக்தா அமைப்பின் உறுப்பினர்களை தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது. லோக் ஆயுக்தாவின் தலைவர் யார், உறுப்பினர்கள் யார் என்று இந்த அமைப்புதான் தேர்வு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
18ஆவது மாநிலமாக தமிழகத்தில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த குழுவிற்கு நிறைய அதிகாரங்கள் உள்ளது. இந்த சட்டத்தின் படி முதல்வரையும் விசாரிக்க முடியும். ஆளுநரின் அனுமதி பெறாமலே குற்றஞ்சாட்டப்பட்டவர் மீது விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு உரிமை இருக்கிறது