காவல்துறை மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம்... போலீசாரை புகழ்ந்துதள்ளும் எடப்பாடியார்... ஏன் தெரியுமா!
சென்னை: ஓசூர் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான நகைகளை கொள்ளையடித்து சென்ற கொள்ளையர்களை விரைந்து பிடித்த போலீசாருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்தார்.
தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம் என்று எடப்பாடி பழனிசாமி புகழாரம் சூட்டினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம ஓசூரில் உள்ள பாகலூர் சாலையில் செயல்பட்டு வரும் முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் கிளையில் சுமார் ரூ.12 கோடி மதிப்பிலான 25 கிலோ தங்க நகைகளை நேற்று மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.ஹைதராபாத்தில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் 6 பேரை போலீஸார் இன்று அதிரடியாக கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து துப்பாக்கிகள், கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கர்நாடகா, தெலுங்கானா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்களைச் சேர்ந்த போலீசார், தமிழக போலீசாருக்கு நன்கு ஒத்துழைப்பு கொடுத்தனர்.இந்த நிலையில் இந்த வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தமிழக போலீசாருக்கு, முதல்வர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு காவல்துறையினரின் மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரம். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் முத்தூட் நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற கொள்ளையில் திருடு போன 15 கோடி ரூபாய் மதிப்புள்ள 25 கிலோ தங்கத்தையும், கொள்ளையர்களையும் துரிதமாக செயல்பட்டு, 18 மணி நேரத்தில் பிடித்த தமிழ்நாடு காவல்துறையினருக்கு, குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட காவல் துறைக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.