'MADE IN TAMILNADU' உலகம் முழுவதும் ஒலிக்கும்.. இதுதான் அரசின் இலக்கு.. முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை: உலகம் முழுவதும் தமிழக தயாரிப்பு (MADE IN TAMILNADU) என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்று தமிழ்நாடு தொழில் ஏற்றுமதி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழக அரசு, மத்திய அரசு மற்றும் பல்வேறு ஏற்றுமதி குழுமங்கள் இணைந்து 'வர்த்தகம் மற்றும் வணிக வாரம்' நிகழ்வினை இந்திய சுதந்திர தின விழாவின் 75-வது வருடத்தை முன்னிட்டு நடத்துகின்றன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' ஏற்றுமதி என்ற பெயரில் சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ்நாடு தொழில் ஏற்றுமதி மாநாடு நடைபெற்றது.
திண்டுக்கல்: பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய பெண் நிர்மலா வெட்டிக் கொலை- தலை துண்டிப்பு!
ஏற்றுமதி கையேடு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார். மேலும் முதல்வர் ஸ்டாலின் 'தமிழ்நாடு ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை' மற்றும் 'குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கான ஏற்றுமதி கையேடு' ஆகியவற்றை வெளியிட்டார். உலக அளவில் வர்த்தகம் மற்றும் வணிகத்தில் தமிழகத்தை முன்னணி மாநிலமாக மாற்றுவதை குறிக்கோளாகக் கொண்டு இந்த மாநாடு நடைபெற்றது.
மு.க.ஸ்டாலின் பேச்சு
இந்த பல ஏற்றுமதி சார்ந்த நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்களைக் கையெழுத்திட்டு உள்ளன. இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:-நாட்டிலேயே ஏற்றுமதியில் தமிழ்நாடு 3-ஆவது பெரிய மாநிலமாக உள்ளது. மோட்டார் வாகனங்கள் ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உள்ளது. ஏற்றுமதி திறனை மேம்படுத்த இந்த அரசு பல நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
தமிழக தயாரிப்பு
ஏற்றுமதி துறை பாதிக்க கூடாது என்பதால் தான் கொரோனா காலத்திலும் அனுமதி வழங்கினோம். தற்போது உலகத்தின் அனைத்து பகுதிகளிலும் இந்திய தயாரிப்பு(MADE IN INDIA) என்று இருக்கிறது. இதேபோல் உலகம் முழுவதும் தமிழக தயாரிப்பு(MADE IN TAMILNADU) என்ற நிலையை நாம் உருவாக்க வேண்டும். இந்த சொல் உலகம் முழுவதும் ஒலிக்க வேண்டும். தலைமை செயலாளர் தலைமையில் மாநில ஏற்றுமதி மேம்பாட்டு குழு அமைக்கப்படும்.
ஒன்றுபட்டு செயல்பட வேண்டும்
பஞ்சுக்கான ஒரு சதவீத சந்தை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. பில்லியன் டாலர் அளவுக்கு ஏற்றுமதியை அதிகரிக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஏற்றுமதி மையங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. 'ஏற்றுமதியில் ஏற்றம் - முன்னணியில் தமிழ்நாடு' என்ற இந்த மாநாட்டில் ரூ.2120.54 கோடி மதிப்பீட்டில் 24 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டன. 41,695 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கிடும் வகையில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், ஏற்றுமதியாளர்களுக்கு அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும். பொது,தனியார் நிறுவனங்கள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.