எடப்பாடியின் மகிழ்ச்சியை கூட்டிய தீர்ப்பு... நேரில் வாழ்த்திய அமைச்சர்கள்!
Recommended Video
சென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியான நிலையில் முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.
டிடிவி. தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் 3வது நீதிபதி சத்யநாராயணன் இறுதித் தீர்ப்பு வழங்கினார். அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துமா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுமா என்ற பரபரப்பு நிலவிய நிலையில் இன்று காலையில் முதலமைச்சர் பழனிசாமி கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துடன் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை நடத்தினார்.
தீர்ப்பு வெளியான பிறகு என்னென்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனிடையே முதல்வர் பழனிசாமி இன்று காலை அரசு பல்நோக்கு மருத்துவமனையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்தது கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இதனால் தீர்ப்பு அரசுக்கு எதிராக இருக்குமோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
ஆனால் அறை எண் 6ல் சரியாக 10.30 மணியளவில் தீர்ப்பை வாசிக்கத் தொடங்கிய நீதிபதி சத்யநாராயணன் 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செல்லும் என்று கூறி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அளித்த தீர்ப்பையே உறுதி செய்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின் தீர்ப்பால் ஆளும் கட்சியினர் பெருமகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் தீர்ப்பு வெளியான பிறகு முதல்வர் பழனிசாமியை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்தனர். 18 எம்எல்ஏக்கள் வழக்கின் தீர்ப்பால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் என்று கூறப்பட்ட நிலையில் தீர்ப்பு சாதகமாக வந்துள்ளது ஆளும்கட்சியின் பலத்தை கூட்டியுள்ளது.
அதிமுக அரசின் நிலைப்பாட்டுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்தால் அந்த 3 பேரும் தகுதி நீக்கம்?