நீட், டாஸ்மாக் கடையை மூடக்கோரி போராடியவர்கள் மீது போடப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் – ஸ்டாலின்
நீட் மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியவர்கள் மீது பதியப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை: நீட் மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியவர்கள் மீது பதியப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மதுக்கடைகளுக்கு எதிராக போராடியவர்கள் மீது அதிமுக ஆட்சியில் போடப்பட்ட 422 வழக்குகள், நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான 446 வழக்குகள் ரத்து செய்யப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்து பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அண்மையில் அதிமுக ஆட்சியின் போது தொடரப்பட்ட 5,570 போராட்ட வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.
மத்திய அரசின் சிஏஏ சட்டம், வேளாண் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீதும் எட்டு வழிசாலை, கூடங்குளம் அணுமின் நிலையம், நியூட்ரினோ திட்டங்களுக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீதும் பத்திரிகையாளர் மீதும் தொடரப்பட்ட வழக்குகள் ரத்து செய்யப்பட்டன.
அதே போல ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய ஆசிரியர்களுக்கு எதிரான வழக்குகளும் மருத்துவர்களுக்கு எதிரான வழக்குகளும் திரும்பப் பெறப்பட்டன. இந்த நிலையில் நீட் மற்றும் டாஸ்மாக்கை எதிர்த்து போராடியவர்கள் மீது பதியப்பட்ட 868 வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 24.6.2021 அன்று சட்டசபையில் ஆளுநர் உரையின் மீதான விவாதத்துக்கு அளித்த பதிலுரையில் 'கடந்த ஆட்சியில் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக ஊடகங்கள் மீது அரசு தொடர்ந்த வழக்குகள், மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகப் போராடியவர்கள் மீதான வழக்குகள், மீத்தேன் - நியூட்ரினோ - கூடங்குளம் அணு உலை - சேலம் எட்டு வழிச்சாலை ஆகிய திட்டங்களுக்கு எதிராக அறவழியில் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்று அறிவித்திருந்தார்.
அந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, 5,570 வழக்குகள் ஏற்கெனவே திரும்பப் பெறப்பட்டுள்ளன. அதன் தொடர்ச்சியாக, கடந்த 13-9-2021 அன்று காவல்துறை மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்துக்கு பதிலளித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுகையில் நீட் தேர்வு மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீது முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
3 ஆக பிரிக்கப்பட்ட சென்னை காவல்துறை: ஆவடி, தாம்பரத்திற்கு இவர்கள் தான் சிறப்பு அதிகாரிகளா?
அந்த அறிவிப்பினையும் செயல்படுத்தும் வகையில், நீட் தேர்வுக்கு எதிராக அறவழியில் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 446 வழக்குகளும், டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு எதிராகப் போராடியவர்கள் மீது பதியப்பட்ட 422 வழக்குகளும், ஆக மொத்தம் 868 வழக்குகளைத் திரும்பப் பெறவும், அதன் மீதான அனைத்து மேல்நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆணையிட்டுள்ளார் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.