பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் - ஸ்டாலின், திருமா, வாழ்த்து
திமுக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். பேரிடரிலிருந்து மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் என்று தனது ரம்ஜான் வாழ்த்து செய்
சென்னை: தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். நோன்பிருந்து தமது கடமையாற்றும் இஸ்லாமியர்கள் யாவருக்கும் அனைத்து நலமும் வளமும் அமைய எனது நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
மு.க ஸ்டாலின் தனது ரமலான் வாழ்த்துச் செய்தியில், தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் இந்தப் பெருநாள் அமையட்டும். அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள்.
தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும் என்று தெரிவித்துள்ளார்.
திருமாவளவன் வாழ்த்து
விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல் திருமாவளவன் தனது வாழ்த்துச்செய்தியில், ரமலான் திங்கள் முழுவதும் முப்பது நாட்கள் இஸ்லாம் வாழ்வியலின் ஐவகை கடமைகளுள் ஒன்றான நோன்பிருத்தலை நிறைவேற்றியுள்ள இஸ்லாமியர்கள் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் இனிய ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
அன்பையும் அமைதியையும் போதித்து மனிதகுலத்தை நல்வழிப்படுத்திச் சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்தும் வாழவியல் உயர்நெறிதான் இஸ்லாம். குறிப்பாக, சகோதரத்துவத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட இஸ்லாம் மாந்தநேயத்தையே முதன்மைக் கோட்பாடாக முன்னிறுத்துகிறது.
நோன்பு காலத்தில் ஏழை எளியோருக்கு அமுது படைப்பதும் கூட்டாக- சமமாக உணவு ஏற்பதும் மாந்தநேயத்தை மேலும் செழுமைப்படுத்துவதாகவே அமைகிறது.
'நோன்பிருத்தல்' என்பது வெறும் சடங்கு அல்ல. சொர்க்கம் சேர்வதற்குரிய சுருக்கமான வழி என அதன்மீது புனிதத்தைக் கற்பிக்காமல், உடலையும் உள்ளத்தையும் அமைதிப்படுத்தவும் தூய்மைப்படுத்தவும் ஏதுவான வழிமுறையே அதுவென இஸ்லாம் உணர்த்துகிறது.
இத்தகைய வாழ்வியல் நெறியைப் போற்றும் வகையில் நோன்பிருந்து தமது கடமையாற்றும் இஸ்லாமியர்கள் யாவருக்கும் அனைத்து நலமும் வளமும் அமைய எனது நெஞ்சம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளை உரித்தாக்குகிறேன் என்று தனது வாழ்த்துச்செய்தியில் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.