வயசாகிடுச்சு.. அதான் மோடி பிரதமராவார்னு முலாயம் மாற்றி சொல்லிட்டாரு.. முட்டு கொடுக்கும் காங்கிரஸ்
சென்னை: ராகுல் காந்திக்கு பதில் மோடி பிரதமராவார் என முலாயம் சிங் மாற்றி கூறியிருப்பார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸை உதறிவிட்டு மாநிலத்தின் முக்கிய கட்சிகளான சமாஜ்வாதியும், பகுஜன் சமாஜ் கட்சியும் இணைந்து கூட்டணி அமைத்துக் கொண்டுள்ளன. இது உத்தரப்பிரதேசத்தை பொருத்த மட்டில்தான்.
மத்தபடி இந்திய அளவில் காங்கிரஸ், திரிணமூல், பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, தேசியவாத காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பாஜகவுக்கு எதிராக வியூகம் வகுத்து வருகின்றன.
சமாஜ்வாதி
இந்த நிலையில் நேற்றைய தினம் நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் இறுதி நாள் கூட்டமாகும். இதனால் அனைத்து தலைவர்களும் நாடாளுமன்றத்தில் உரையாற்றினர். அப்போது சமாஜ்வாதி கட்சியின் தலைவராக இருந்த முலாயம்சிங் யாதவ் பேசினார்.
மோடி வெற்றி
அவர் பேசுகையில் மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும், எங்களது விருப்பத்திற்கான பிரதமர் நீங்கள்தான். 2019ம் ஆண்டு தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக வேண்டும்.
கருத்து
அனைத்து கட்சிகளையும் மோடி அரவணைத்து செல்கிறார். தற்சமயம் அவையில் உள்ள அனைத்து எம்பிக்களும் மீண்டும் வெற்றி பெற்று எம்பிக்களாக வர வேண்டும் என்று கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். ஆடு பகை குட்டி உறவா என்பதற்கிணங்க, அகிலேஷோ பாஜகவை எதிர்க்கிறார். அவரது தந்தை முலாயமோ இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
வயதாகிவிட்டது
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே எஸ் அழகிரி கூறுகையில், ராகுல் காந்தி பிரதமராக வருவார் என்பதற்கு பதிலாக மோடி பிரதமராவார் என முலாயம்சிங் மாற்றி கூறியுள்ளார். முலாயம் சிங்கிற்கு வயதாகிவிட்டது. அதனால் அவர் மாற்றி கூறிவிட்டார் என தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி தெரிவித்துள்ளார்.