நல்லா பேசுனாரு.. ஆனா கடைசியில இப்படி சறுக்கிட்டாரே.. கலகலத்த அழகிரி பேச்சு
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் அழகிரி மீது விமர்சனம் செய்துள்ளனர்.
சென்னை: கோஷ்டிகளின் தலைவரே கோஷ்டி கூடாது என்று சொல்வதா என கே.எஸ்.அழகிரியை காங்கிரஸ் நிர்வாகிகள் கிண்டல் அடித்தார்களாம்!
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக பொறுப்பேற்றுள்ள கே.எஸ்.அழகிரி கடந்த வியாழக்கிழமை மாவட்ட தலைவர்கள் மற்றும் பல்வேறு அணிகளின் கூட்டத்தை சத்தியமூர்த்தி பவனில் நடத்தினார். அதில் திருநாவுக்கரசர், தங்கபாலு, உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அழகிரி, காங்கிரஸில் தனி மனிதர் துதி பாடல் வேண்டாம் என்றும், நாம் அனைவரும் ராகுல் என்ற ஒற்றை தலைமையின் கீழ் இருப்பதாகவும் பேசினார். இதை கேட்ட அங்கிருந்த நிர்வாகிகள் பலரும், சரி ஏதோ மனிதர் கோஷ்டியை உருவாக்கமாட்டார் போல என்றே நினைத்தனர்.
ஆனால், அவரது பேச்சின் இறுதியில் போட்டாரே ஒரு போடு... "எளிய தொண்டனான எனக்கு தலைவர் பதவி அளித்த ராகுல், சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்கு நன்றி" என்றார். இதைக்கேட்டதும் கூடியிருந்த கூட்டத்தினர் ஒருவரை ஒருவர் பார்த்துகொண்டு உஷ்ணமாகி விட்டனர்.
ராகுலுக்கு நன்றி சொல்றது ஓகே., ஆனா சிதம்பரத்துக்கும், அவரது மகனுக்கும் அழகிரி எதுக்கு நன்றி சொல்லணும் என்று அந்த கூட்டம் முடியும் வரை ஒரே கிசுகிசுதான்.. முணுமுணுப்புதான்..
இப்ப இருக்கிறதே கோஷ்டியிலதான்... இதுல கோஷ்டி கூடாது என்பதா? நல்லா இருக்கே அழகிரி நியாயம் என்று காங்கிரஸ் கட்சியினர் கிண்டலடிக்க ஆரம்பித்துவிட்டனராம்.