மேகதாது குறித்து விவாதிக்க.. தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம்.. நாளை மறுநாள்
சென்னை: மேகதாது அணை விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டு இன்று பெரும் போராட்டத்தை நடத்திய பின்னணியில் தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.
நாளை மறு நாள் மாலை 4 மணிக்கு சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக சட்டசபை செயலாளர் கே.சீனிவாசன் அறிவித்துள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்ட கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான ஆய்வுப் பணிகளையும் அது மேற்கொள்ளவுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகமும் தன்னிச்சையாக அளித்துள்ளது.
இது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்று திமுக தலைமையில் பல்வேறு கட்சிகள் கூடி திருச்சியில் பிரமாண்ட போராடத்தை நடத்தின. இந்த நிலையில் தற்போது தமிழக அரசும் களத்தில் குதித்துள்ளது. தமிழக சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நாளை மறு நாள் கூட்டப்பட்டுள்ளது.
நாளை மறு நாள் மாலை 4 மணிக்கு சிறப்புக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது. அதில் மேகதாது குறித்து விவாதிக்கப்படவுள்ளது. கர்நாடக அரசின் முடிவைக் கண்டித்து சிறப்புத் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் தெரிகிறது.
இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நாளை மாலை அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் அதிமுக. எம்பிக்களுடன் ஆலோசனை நடத்தவுள்ளனர். அப்போது நாடாளுமன்றத்தில் அதிமுகவின் செயல்பாடு குறித்தோ அல்லது பிரதமரைச் சந்தித்து நேரில் புகார் அளிக்கவோ தீர்மானிக்கப்படலாம் என்று தெரிகிறது.