தமிழகத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா; 6,406 பேர் டிஸ்சார்ஜ்; 94 பேர் உயிரிழப்பு
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 6,495 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் 6,406 பேர் கொரோனா சிகிச்சைக்குப் பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இந்தியாவில் தமிழகம் தற்போது 3-வது இடத்தில் இருக்கிறது. மகாராஷ்டிராவைத் தொடர்ந்து ஆந்திரா 2-வது இடத்தில் இருக்கிறது.
தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் மேலும் 6,495 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,22,085 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 94 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 7,231 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 6,406 பேர் ஞாயிற்றுக்கிழமை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
தென்காசி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளியுடன் தீப்பற்றி எரிந்த 108 ஆம்புலன்ஸ்!
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 3,62,133 ஆகும். தற்போதைய நிலையில் தமிழகத்தில் மொத்தம் 52,721 பேர் மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மாவட்டங்களில் சென்னையில் மிக அதிகபட்சமாக 1249 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கோவையில் மொத்தம் 498 பேருக்கும் செங்கல்பட்டில் 419 பேருக்கும் கடலூரில் 383 பேருக்கும் ஒரேநாளில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரேநாளில் 16 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.