32 டிஎம்சி காவிரி தண்ணீரை உடனே திறந்து விடுங்க - காவிரி குழு கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல்
சென்னை: ஜூலை மாதத்திற்கான 32 டிஎம்சி தண்ணீரை காவிரியில் இருந்து உடனே திறந்துவிட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டத்தில் தமிழகம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு மொத்தம் 177.25 டிஎம்சி காவிரி நீா் தமிழகத்திற்கு தேவை எனவும் காவிரி நீா் முறைப்படுத்தும் குழுவிடம் திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி வலியுறுத்தியுள்ளார்.
காவிரி நீா் முறைப்படுத்தும் குழுவின் 30ஆவது கூட்டம், அதன் தலைவா் நவீன்குமார் தலைமையில் காணொலிக் காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பேசிய திருச்சி மண்டலத் தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி, தமிழக அணைகளில் தற்போதைய நீா் இருப்பு, நீா் வரத்து, நீா் விநியோகம் உள்ளிட்ட விவரங்களை விளக்கினார் மேலும், புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நீா் அளவுகளையும் குறிப்பிட்டார்.
காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் தற்போது நல்ல மழை பெய்கிறது. எனவே, தமிழகத்துக்கு ஜூன், ஜூலை மாதங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை கா்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும். ஜூன் மாதத்துக்கு 9 டிஎம்சியும், ஜூலை மாதத்துக்கு 32 டிஎம்சியும் நீா் வழங்க வேண்டும்.
தற்போது வரை 9 டிஎம்சி தண்ணீா் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. எனவே, மீதமுள்ள தண்ணீரையும் திறக்க வேண்டும். குறுவை, சம்பா சாகுபடிக்கு நீா் தேவைப்படுவதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஒதுக்கீட்டை கணக்கில் கொள்ள வேண்டும்.மேலும், நிகழாண்டு தமிழகத்துக்கு 177.25 டிஎம்சி தண்ணீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதேபோல, பிற மாநில உறுப்பினா்களும் தங்களுக்கு தேவையான அளவுகள் குறித்து விளக்கினா். மேலும், அனைத்து விவரங்களும் உரிய படிவத்தில் வழங்கப்பட்டன. இவற்றைக் கேட்டுக்கொண்ட குழுத் தலைவா்,காவிரி நதிநீா் மேலாண்மை ஆணையத்துக்கு இதன் விவரங்களைச் சமா்ப்பிப்பதாக தெரிவித்தார்.
கந்தசஷ்டி கவச பாடலை கொச்சைப்படுத்துவதா... கொங்கு ஈஸ்வரன் கடும் கண்டனம்
கூட்டத்தில் தமிழகம், கா்நாடகம், கேரளம், புதுச்சேரி உள்ளிட்ட குழுவில் இடம்பெற்றுள்ள மாநிலக் குழு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.
தமிழகம் சாா்பில் காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவா் ஆா். சுப்பிரமணியன், துணைத் தலைவா் பட்டாபிராமன், திருச்சி உதவி செயற்பொறியாளா் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனா்.
மேலும், மத்திய நதிநீா் ஆணைய தலைமைப் பொறியாளா் என்.எம். கிருஷ்ணன் உன்னி, மத்திய தோட்டக் கலைத்துறை ஆணையா் பி.என். சீனிவாசன், காவிரி நீா்வாரி நிகாம் லிமிடெட் மேலாண் இயக்குநா் கே. ஜெயப்பிரகாஷ், புதுச்சேரி பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் எஸ். மகாலிங்கம் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.