முதல்வர் எடப்பாடி தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம்- புறக்கணித்த துணை முதல்வர் ஓபிஎஸ்
சென்னை: கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்காமல் இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுகவில் முதல்வர் பதவி தமக்குதான் வேண்டும் என அடம்பிடித்து வருகிறார் ஓபிஎஸ். அதிமுகவின் செயற்குழுவிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார் ஓபிஎஸ். ஆனால் அமைச்சர்கள் உட்பட பெரும்பாலானோர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியே முதல்வர் வேட்பாளர் என்பதில் தீர்மானமாக உள்ளனர்.
இது தொடர்பாக அக்டோபர் 7-ந்தேதி அன்று இறுதி முடிவு அறிவிக்கப்பட இருக்கிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை முதல்வர் ஈபிஎஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் இருவரும் கூட்டாக அக்டோபர் 7-ல் அறிவிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று மாவட்ட ஆட்சியர்கள் கூட்டம் நடைபெற்றது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான இந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் கடும் ஏமாற்றத்தில் இருப்பதாலேயே இந்த கூட்டத்தை ஓபிஎஸ் புறக்கணித்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.