என்னது.. ஏசிஎஸ் தோற்றதற்கு இவர்தான் காரணமா?.. லிஸ்ட்டுலேயே இல்லாத செம டிவிஸ்ட்!
மதுகுடிப்போர் விழிப்புணர்வு சங்க தலைவர் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்
Recommended Video
சென்னை: "2530 வாக்குகள் தந்த வேலூர் மக்களுக்கு என் நன்றி" என்று "டாஸ்மாக்" செல்லபாண்டியன் தெரிவித்துள்ளார்.
வேலூர் போட்டியிட்ட சுயேட்சைகளில் தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் மாநில தலைவர் செல்லப்பாண்டியனும் ஒருவர்.
அன்று வேட்பு மனு தாக்கல் செய்ய வரும்போதே வித்தியாசமாக வந்தார். கழுத்தில் கொய்யா பழம் மாலை அணிந்து கொண்டே உள்ளே வந்த இவர், அப்படியே போய் வேட்பு மனுவையும் தாக்கல் செய்துவிட்டு, செய்தியாளர்களிடமும் பேசினார்.
மதுக்கடை
அப்போது, "மது குடிப்பவர்கள் கொய்யாப்பழம் சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. அதனால்தான் அதை வலியுறுத்தி கொய்யா பழம் அணிந்து வந்தேன். நான் ஜெயித்து வந்தேன் என்றால், எல்லா டாஸ்மாக் கடைகளிலும் தரமான சரக்கு கிடைக்க செய்வேன், ரெட் லைட் ஏரியா அமல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்" என்று பகீர் வாக்குறுதிகளை அசால்ட்டாக சொல்லி விட்டு போனவர்தான் இவர்.
ஆச்சரியம்
இப்படி குண்டக்க மண்டக்கவாக பேசிய செல்லபாண்டியன், நடந்து முடிந்த தேர்தலில் 2530 வாக்குகளை பெற்றிருப்பது ஆச்சரியமாக உள்ளது. அதைவிட ஆச்சரியம் இவர் ஓட்டு போட்ட 2530 பேருக்கும் நன்றி சொல்லி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளதுதான்.
நன்றி
அந்த அறிக்கையில், "2530 வாக்குகள் அள்ளித் தந்ததற்கு நன்றி நன்றி. வேலூர் மக்களவைத் தொகுதி வாக்காளர்களுக்கும், டாஸ்மாக் மது பிரியர்களின் குடும்பங்களுக்கும் இதயப்பூர்வமான நன்றியை பாதங்களில் சமர்பிக்கிறேன். என் முயற்சிக்கு உறுதுணையாக இருக்கும் எல்லோருக்கும் நன்றி" என்று சொல்லி இதை இணையத்திலும் பதிவிட்டுள்ளார்.
அலப்பறை
செல்லபாண்டியன் பிரித்த இந்த 2530 ஓட்டுக்கள் திமுகவின் வெற்றிக்கு உதவியது என்று எடுத்து கொள்வதா? அல்லது ஏசிஎஸ்-ன் படுநூலிழை தோல்விக்கு காரணம் என்று எடுத்து கொள்வதா என்று தெரியவில்லை. ஆனால் மதுக்கடைகளை மூட வேண்டும் என்று கத்தி கத்தி போராட்டம் நடத்தி வரும் நிலையில், இப்படி ஒருசங்கத்துக்கு, இவ்வளவு ஓட்டுக்கள் கிடைத்துள்ளதையும், இதை பெருமையாக நினைத்து செல்லபாண்டியன் நன்றி சொல்லி அலப்பறை கொடுத்துள்ளதையும் நம்மால் ஜீரணிக்கவே முடியவில்லை.