தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை தொடரும்.. தலைமை செயலாளர் அளித்த பதில்
சென்னை: இ-பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ-பாஸ் நடைமுறை தொடரும் என்றும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறினார்.
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி உள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி போட்டுள்ளது. கொரோனா பயத்தால் திருப்பூர், கோவை, சென்னை போன்ற ஊர்களில் இருந்து சொந்த ஊருக்கு வந்த கூலி தொழிலாளர்கள் மீண்டும் அங்கு சென்ற வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இ-பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும் என்பது தான் தமிழக மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக உள்ளது. மத்திய அரசே இ-பாஸ் நடைமுறையை வேண்டாம் என்று சொல்லிவிட்ட நிலையில் தமிழக அரசு அதைகைவிட மறுப்பதற்கு திமுக, உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
ஏளனம் செய்த ஆசிரியர்களுக்கு சமர்பணம்..10ம் வகுப்பில் பாஸ் ஆக்கிய முதல்வருக்கு நன்றி.. மாணவன் போஸ்டர்
வேலைக்கு போக முடியவில்லை
மக்கள் ஏற்கனவே வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வரும் நிலையில் அதை மீட்டெடுக்க வேலைக்கு செல்ல வேண்டியது அவசியம் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் தற்போது உள்ள இபாஸ் நடைமுறையால் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.
சான்றுகள் சிரமம்
தொழிலாளர்களை தாண்டி, உறவினர்களின் திருமணம், மரணம், மருத்துவ அவசரம் போன்ற எந்த ஒரு சூழலுக்கும் இ பாஸ் இருந்தால்தான் செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது. ஆனால் இபாஸ் யாருக்கும் கிடைப்பதும் இல்லை. அரசின் நடைமுறைகளின் படி ரத்த உறவுகளுக்கு மட்டுமே இ பாஸ் கிடைக்கிறது. அதற்கு முறையான ஆவணங்கள் கட்டாயம் இணைக்க வேண்டியுள்ளது. கிராமபுற மக்களுக்கு இந்த நடைமுறை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. சான்றுகளை இணைப்பதும் சிரமமாக உள்ளது. சான்றுகளை இணைத்தாலும் திருமணம் மற்றும் மரணம் போன்ற நிகழ்வுகளுக்கு கூட ஏதாவது தவறுகளை கூறி இ பாஸ் நிராகரிக்கப்படுகிறது.
முதல்வர் பதில்
ஏற்கனவே பொதுபோக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ள சூழலில, பல்வேறு சிக்கலை இ பாஸ் நடைமுறையால் மக்கள் எதிர்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் இ பாஸ் நடைமுறையை எளிதாக்க குழு அமைக்கப்படும் என்று மட்டும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் தெரிவித்தார். இந்நிலையில் இ-பாஸ் நடைமுறை எப்போது வரை நடைமுறையில் இருக்கும் என்கிற கேள்விக்கு தமிழக தலைமை செயலாளர் சண்முகம் பதில் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு, தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் தலைமையில் சென்னையை அடுத்த மறைமலை நகரில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் , டிஜிபி திரிபாதி, சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் , மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இ பாஸ் ரத்து ஆகுமா
இந்த கூட்டத்துக்குப் பின் தலைமைச் செயலாளர் சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இ பாஸ் முறையை ரத்து செய்ய எழுந்துள்ள கோரிக்கைகள் குறித்து கேட்கப்பட்டது. "இ பாஸ் பெறுவதில் இருக்கும் நடைமுறை சிக்கல்களைக் களைய நடவடிக்கை எடுத்து வருகிறோம். மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல கட்டுப்பாடுகள் இருக்கும் வரை இ பாஸ் நடைமுறை தொடரும். பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்" என்றார்.
கண்காணிக்க குழு
தொடர்ந்து பேசிய அவர், "முகக் கவசம் அணிவது, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றில் குறைபாடு உள்ளது. எனவே இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த, வீடுகளுக்கே சென்று முகக் கவசங்களை கொடுக்க வேண்டும் என்று ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுத்துள்ளோம். கொரோனா தொற்று அதிகமுள்ள பகுதிகளில் தடுப்பு பணிகளைக் கண்காணிக்கக் குழுக்கள் அமைக்கப்படும். கொரோனா தொற்று ஏற்பட்ட நபர்களிடம் தொடர்பில் இருந்த நபர்களைத் தீவிரமாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். நோய்த் தொற்று அதிகமாக உள்ள பகுதிகளில் மாநில அளவில் சிறப்புக் குழுக்களை அனுப்புவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்