பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு.. குட் நியூஸ் சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்.. சூப்பர்!
சென்னை: பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறப்பது குறித்து மருத்துவ வல்லுநர் குழுவிடம் ஆலோசனை பெற்ற பின்னர் தான் முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் பூட்டிக் கிடக்கின்றன. 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
மோடி 2.oஇல் இப்போது 77 அமைச்சர்கள்.. 'சிறிய அரசு சிறப்பான ஆட்சி கோஷம்' என்ன ஆனது.. ஏன் இந்த மாற்றம்
எழுதுக இயக்கம்
இந்த நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் அப்துல் கலாம் நினைவு நாளை முன்னிட்டு 'எழுதுக இயக்கம்' சார்பில் நான்காம் வகுப்பு மாணவி முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் எழுதிய 100 புத்தகங்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதனை விஞ்ஞானி சிவதாணு பிள்ளை பெற்றுக் கொண்டார். 43 நாட்களில் மாணவர்கள் நூல்களை எழுதி கின்னஸ் சாதனை படைத்து இருப்பதாகவும் எழுதுக இயக்கத்தைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.
பள்ளிகள் எப்போது திறக்கும்?
இதனை தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:- மூன்று மாநிலங்களில் பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுகுறித்து முதல்வரிடம் கலந்து ஆலோசிக்கபட்டுள்ளது. மேலும், மருத்துவ வல்லுனர்கள் கொண்ட குழுவிடம் கலந்து ஆலோசித்த பின்னரே பள்ளிகள் திறப்பது தொடர்பாக அறிவிப்பு வெளியிடப்படும். பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பாடத்திட்டம் குறைக்கப்படும்.
கடும் நடவடிக்கை
பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொருளாதாரம் பாதிக்கப்பட்ட பெற்றோர்களிடம் இருந்து 75 சதவீதமும், பாதிக்கப்படாத பெற்றோர்களிடம் 85 சதவீதமும் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதையும் தாண்டி தனியார் பள்ளிகள் கூடுதலாக கட்டணம் வசூலிப்பதாக ஆதாரத்துடன் புகார் வந்தால் அந்தப் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆசிரியர் தகுதி தேர்வு
ஆசிரியர் தகுதி தேர்வை ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் நடத்துவது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்கவில்லை. தனியார் பள்ளிகளில் இருந்து அரசு பள்ளிகளில் 2 லட்சத்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் சேர்ந்துள்ளனர். பிளஸ் 2 தேர்வு எழுத தனித்தேர்வர்கள் 39, 579, பேர் விண்ணப்பம் செய்து இருக்கின்றனர். இவர்களில் 313 பேர் மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் கலந்து ஆலோசித்து வருகிறோம்.
பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள்
விரைவில் பொது தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்படும் என்பதால் 10,11, 12ம் வகுப்பு ஆகிய பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பாடத்திட்டம் குறைக்கப்பட உள்ளது. இதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண் வழங்கப்பட்டது திருப்தி அளிக்காத 23 மாணவர்கள் தேர்வு எழுத விருப்பம் தெரிவித்து விண்ணப்பம் செய்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஆசிரியர்கள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம். இது குறித்து விரைவில் வெளியிடப்படும் என்று அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.