சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு காத்திருக்கும் பேரிடி.. சி வோட்டர் கருத்து கணிப்பு!
சென்னை: தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழக்கும் என ஏபிபி சி வோட்டர் கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை இரு பெரும் ஜாம்பவான்களான ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோர் இல்லாமல் தமிழகம் சந்திக்கிறது.
அந்த இருவரும் இல்லாததால் மக்களின் செல்வாக்கு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் தேர்தலாக இது கருதப்படுகிறது. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் என தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முக ஸ்டாலின்
அதிமுகவை நிராகரிப்போம் என்ற முழக்கத்துடன் மு.க. ஸ்டாலின் தனது பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். விடியலை நோக்கி தமிழகம் என்ற தலைப்பில் உதயநிதி ஸ்டாலின் தனது பிரச்சார பயணத்தை தொடங்கியுள்ளார். இவர்கள் செல்லும் இடங்களில் அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளை முன்னெடுத்து வைக்கிறார்கள்.
முடிவு
அது போல் இந்த முறை ஸ்டாலின் எப்படியும் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். இந்த நிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. அதில் திமுகவுக்கு சாதகமான முடிவுகளே வந்துள்ளன.
ஏபிபி சி வோட்டர்
ஏபிபி சி வோட்டர் நடத்திய கருத்து கணிப்பில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமோக வெற்றி பெற்று முதல்வராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்படுவார் என கணித்துள்ளது. திமுக தலைமையிலான ஐமுகூ 158 முதல் 166 இடங்களில் வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.
அதிமுக - பாஜக ஆட்சி
அது போல் தற்போது ஆட்சியில் இருக்கும் ஆளும் கட்சியான அதிமுக- பாஜக கூட்டணி 60 முதல் 68 இடங்கள் வரையே வெற்றி பெறும் என தெரிவித்துள்ளது. அதிமுக ஆட்சி இன்னும் 100 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என அமைச்சர்கள் தெரிவித்து வந்த நிலையில் கருத்துக் கணிப்புகளோ இப்படி சொல்கின்றன.