என்ன கிழவி.. சவுக்கியமா.. மச்சான்தான் இங்க நிக்கறாரு.. மறக்காம ஓட்டு போட்டுடு.. அதெல்லாம் ஒரு காலம்!
அந்தக்காலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் எப்படி இருந்தன என்பது குறித்து ஒரு பார்வை
சென்னை: "அலோ.. அலோ.. மைக் டெஸ்டிங்.. 1,2,3.." என்று ஊருக்குள் ஒரு சத்தம் காற்றை கிழித்து கொண்டு வரும்!
ஒரு மாட்டு வண்டி.. அதன்மேல் வேயப்பட்ட ஒரு கூரை.. அந்த கூரைக்கு ரெண்டு பக்கம் குழாய் ஸ்பீக்கர்கள்.. வண்டிக்குள் நாலைந்து பேர்.. அவர்கள் கையில் பிட் நோட்டீஸ்கள்.. அதை தப்பும் தவறுமாக படித்து பார்த்தபடியே ஓட்டு கேட்டு வருவார்கள்.. ஆனால் நமக்குதான் காது ஜவ்வு அந்து போயிடும்!
வசதி படைத்த கட்சி என்றால் ரிக்ஷா, இல்லையென்றால் மாட்டு வண்டிதான்! இப்படித்தான் இருந்தது அந்தக்கால தேர்தல் பிரச்சாரங்கள்! கிட்டத்தட்ட திருவிழா போலதான்! ஊருக்குள் ஓட்டு கேட்க இவர்கள் வந்தாலே எல்லோருமே ஒன்றுதிரண்டு வந்துவிடுவார்கள்.
தேர்தல் புலியின் வீட்டுக்குள் புகுந்த கருணாநிதி.. சூரியனுக்கே உங்க ஓட்டு.. ஷாக் ஆன பரிசுத்த நாடார்
மாட்டு வண்டி
வண்டியை நிழல் பார்த்து ஒரு ஓரமாக நிப்பாட்டி விடுவார்கள். கொஞ்ச நேரத்துக்கெல்லாம் அந்த வண்டியை சுற்றிலும் சிறுவர் கூட்டம் கூடிவிடும்.. எதற்காக என்றால் வண்டியில் ஒட்டப்பட்டுள்ள பிட்நோட்டீஸ்களை வேடிக்கை பார்க்க!
மாமா
படிக்க தெரிந்த குழந்தைகள் எழுத்து கூட்டி படித்து கொண்டிருப்பார்கள். அல்லது அதில் உள்ள வேட்பாளர்களின் போட்டோவை பார்த்து "இந்த மாமாவை எனக்கு தெரியும்.. நான் நேர்ல் பார்த்திருக்கேன்" என்று குதூகலத்துடன் சொல்லி குதிப்பார்கள். வண்டிக்குள்ளிருப்பவர்கள் நோட்டீஸ்களை விநியோக ஆரம்பித்தால், அதை வாங்குவதற்கு சிறுவர்களுக்கு இடையே போட்டா போட்டி ஏற்படும்!
பிரச்சார பீரங்கிகள்
ஓட்டு கேட்க பிரச்சார பீரங்கியாக வருபவர்களோ, "என்ன கிழவி.. சவுக்கியமா.. எங்க மச்சான்தான் இங்க நிக்கறாரு.. மறக்காம ஓட்டு போட்டுடு.. வண்டி அனுப்பறேன்... அதுல எல்லாரும் ஏறி வந்துடுங்க" என்று சொந்த வீட்டு விசேஷத்துக்கு கூப்பிட்டு போவது போல செல்வார்.
பெரியம்மா..
அன்றைய காலங்களில் பெரும்பாலும் வேட்பாளர்கள் பொதுமக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள்தான்.. அதனால் அங்கே செயற்கைதனத்துக்கும் போலித்தனத்துக்கும் வேலை கிடையாது. "பெரியம்மா.. உன் மகனா என்னை நினைச்சு நீ போன முறை மாதிரியே ஓட்டு போடணும்.. வேற யாருக்காச்சும் போட்டேன்னு தெரிஞ்சா எனக்கு கெட்ட கோபம் வந்துரும்.. சொல்லிட்டேன்" என்று வாக்கு கேட்பார்.
ஸ்பீக்கர்கள்
பிரச்சாரம் செய்வதற்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும். அது பெரிய மைதானம் போல இருக்கும். மாலை 7 மணிக்கு கூட்டம் என்றால் மதியமே அந்த மைதானம் களைகட்டும்.. ஸ்பீக்கர்களில் பாட்டு ஒலித்து அந்த ஊரையே குறிப்பால் உணர்த்திவிடும். உச்சி வெயில் பார்க்காமல் சிறுவர்கள் மைதான மண்ணில் புரண்டு கொண்டிருப்பார்கள்.
பாட்டு சத்தம்
பந்தல் வேலை ஒரு பக்கம் நடக்க, பாட்டு சத்தம் ஒரு பக்கம் கேட்க என திருவிழாவை ஞாபகப்படுத்திவிட்டு செல்லும். ஜாதி, மதம், இனம், கட்சி பேதமின்றி எல்லாருமே எல்லா பொதுக்கூட்டங்களிலும் கலந்து கொள்வார்கள். தலைவர்களின் பேச்சை கவனம் சிதறாமல் உன்னிப்பாக கேட்பார்கள். புரிகிறதோ இல்லையோ.. தரையின் முன்வரிசையில் குழந்தைகள் ஆஜராகி இருப்பார்கள்.
யாருக்கு ஓட்டு?
அதுவும் தேர்தல் நாள் இன்னும் சிறப்பாக இருக்கும். காலையிலேயே மக்கள் பரபரப்பாக இருப்பார்கள். தெருவில், ரோடில் எதிரெதிரே சந்தித்துகொள்ளும்போது கேட்கும் முதல்கேள்வியே "நீ போட்டுட்டியா..நான் இன்னும் போடல.. அதான் போய்ட்டு இருக்கேன்.. அங்க ரொம்ப ஜனமா இருக்கா? யாருக்கு போட்டே.. சூரியனுக்கா, கைக்கா, இலைக்கா?" என்று சிரித்து கொண்டே கேட்பார்கள். அதற்கு முழுமையான பதில் எதிர் தரப்பிலிருந்து வராது.. பெரும்பாலும் சிரிப்புதான் பதிலாக இருக்கும். சில சமயம் காதில் போய் யாருக்கு ஓட்டு போட்டோம் என்று ரகசியமாக சொல்வார்கள்!
ம்ம்.. அதெல்லாம் ஒரு காலம்!