கிளம்பியது சர்ச்சை.. "சசிகலா நல்லாருக்கார்னா.. எதுக்கு ஐசியூவில் சேர்த்தீங்க.. கணேசன் சரமாரி கேள்வி
சசிகலா சிகிச்சையில் வெளிப்படை தன்மை கேட்கின்றது பார்வர்டு பிளாக் கட்சி
சென்னை: "சிகிச்சை முடிந்து நலமுடன் இருக்கிறார் என்று சொல்லி, சிறைத்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு, மறுபடியும் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஐசியூவில் எதற்காக சசிகலாவை சேர்க்க வேண்டும்? தமிழகத்தின் ஆகப் பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கும் சசிகலாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும்" என்று தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி வலியுறுத்தி உள்ளது.
நேற்றில் இருந்து ஜெயிலில் இருக்கும் சசிகலாவுக்கு உடம்பு சரியில்லை.. அது சம்பந்தமான செய்திகளே இந்த 2 நாட்களாக சோஷியல் மீடியாவை ஆக்கிரமித்து கொண்டு வருகின்றன. அதேசமயம், சசிகலாவின் உடல்நிலை நன்றாக இருப்பதாகவும், பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் ஆஸ்பத்திரி தரப்பிலும், டிடிவி தினகரனும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஆனாலும், சசிகலா சிகிச்சையில் பலருக்கு சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.. அதிலும் சசிகலா குடும்பத்தை சேர்ந்த திவாகரனே இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.. "சசிகலா விடுதலையாக இருந்த நிலையில் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு இருக்குமோ என்று சந்தேகப்படுகிறேன்" என்று ஓபனாகவே கூறியிருக்கிறார்.
அதுபோலவே, தமிழ்நாடு பார்வர்டு பிளாக் கட்சி ஒரு கோரிக்கையை விடுத்துள்ளது.. அதன் பொதுச் செயலாளர் டி. கணேசன் இது சம்பந்தமாக ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளதாவது:
தமிழகத்தின் ஆகப் பெரும் அரசியல் ஆளுமையாக விளங்கும் சசிகலா அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படை தன்மை வேண்டும் என தமிழ்நாடு பார்வர்டு பிளாக் சார்பாக வலியுறுத்துகிறேன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 12 மணி நேரமாகியும் அவருக்கு சிடி ஸ்கேன் எடுக்கப்படவில்லை என வரும் தகவல் அதிர்ச்சியையும் வியப்பையும் அளிக்கிறது.
வரும் 27ஆம் தேதி விடுதலையாகி தமிழகம் வரவுள்ள நிலையில் அவரது உடல் நிலையில் சிறைத்துறை கவனம் செலுத்தாது வேதனை அளிக்கிறது. கடந்த 7 நாட்களாக அவருக்கு காய்ச்சல் உள்ளிட்ட தொந்தரவுகள் இருந்தும் அதனை அவரது உறவினர்கள், வழக்கறிஞர்களிடம் தெரிவிக்காதது ஏன்...?
சிகிச்சை முடிந்து நலமுடன் உள்ளார் என்று கூறி சிறைத்துறைக்கு அழைத்து செல்லப்பட்டு, அடுத்த ஒரு மணி நேரத்தில் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து சென்று தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்க காரணம் என்ன...? என்ற கேள்வி எழுப்பாமல் இருக்க முடியவில்லை.
வீல் சேரில் இருந்தபடியே.. தொண்டர்கள், உறவினர்களை பார்த்து உற்சாகத்துடன் கையசைத்த சசிகலா
எனவே ஒட்டுமொத்த தமிழகமும் அவரது வருகையை எதிர்நோக்கி காத்திருக்கிறது என்பதை புரிந்துக் கொண்டு, அவருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் வெளிப்படைத் தன்மை வேண்டும். தமிழக மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவ்வப்போது மருத்துவ அறிக்கைகளை வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.. பூரண நலம் பெற்று சின்னம்மா தமிழகம் வர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை வரவேற்க தமிழக மக்களும், தமிழ்நாடு பார்வர்டு பிளாக் தொண்டர்களும் காத்திருக்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.