தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமனம்
சென்னை: தமிழக கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகளாக இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
லோக்சபாவுக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. ஏப்ரல் மாதம் தொடங்கி பல கட்டமாக வாக்குப் பதிவு நடைபெறும் என பேச்சு அடிபடுகிறது. தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திற்கு 2 கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாலாஜி மற்றும் ராஜாராமன் ஆகியோர் கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது தலைமைத் தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹு இருக்கிறார். அவருக்குக் கீழ் இரண்டு இணை தலைமைத் தேர்தல் அதிகாரிகள் உள்ளனர். இவர்கள் தவிர தற்போது கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் இருவரை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
இதையடுத்து தேர்தல் தொடர்பான பணிகள் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. இரு கூடுதல் தலைமைத் தேர்தல் அதிகாரிகளும் ஒரு ஆண்டு காலத்திற்கு பதவியில் நீடிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.