சென்னையின் பகல் நேரத்தை இரவாக்கிய கார்மேகம்... தமிழகம் முழுவதும் ஜில்லு ஜில்லு கூல் கூல்!
Recommended Video
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடக்கத்தின் அறிகுறியாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்த போதும் தற்போது பகலை மறைத்து மாலை நேரம் வந்துவிட்டதை போல கும்மிருட்டுடன் கார்மேகம் சூழ்ந்திருக்கிறது. இதனால் பலத்த மழை பெய்யும் வாய்ப்பு இருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை நாளை முதல் தொடங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. எனினும் சென்னை உள்பட தமிழகத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்யத் தொடங்கியுள்ளது. சென்னை நகரின் முக்கியப் பகுதிகள் மற்றும் புறநகர்ப்பகுதிகளில் இரவு முதலே மழை பெய்து வருவதால் குளிரான வானிலை நிலவுகிறது.
இன்று காலை முதல் மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில் தற்போது சென்னை பட்டினப்பாக்கம், மயிலாப்பூர், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது. கும்மென்று இருட்டிக் கொண்டிருக்கும் மழை மேகத்துடன் கிடுமுடு இடியும் முழக்கம் போட்டு வருகிறது. இதனால் சிறிதுநேரத்தில் பலத்த மழை பெய்யும் சூழல் நிலவுகிறது.
சென்னை மட்டுமின்றி காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்துள்ளது. மதுரை மாவட்டத்தில் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கன்னியாகுமரி மற்றும் சுற்றுவட்டாரத்தில் மிதமான மழை பெய்துள்ளது. ஆரல்வாய்மொழி, முப்பந்தல், தக்களையில் பரவலாக பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.