தை பொங்கலும் வந்தது.. கரும்பும் வந்தது.. அட போனஸும் வந்தாச்சுப்பா.. தமிழக அரசு ஹேப்பி நியூஸ்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது
சென்னை: அரசு ஊழியர்களுக்கு வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போனஸ் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை அடுத்த வாரம் வர உள்ளது.. இதையொட்டி, 15, 16, 17 தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக பொங்கல் பண்டிகைக்கு அரசு ஊழியர்களுக்கு அரசு சார்பில் போனஸ் வழங்கப்படும்.. குறிப்பாக 'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும், குடும்ப ஓய்வூதியர்களுக்கும் இந்த போனஸ் வழங்கப்படும்.
அதனால் வரும் பொங்கலை முன்னிட்டு, 'ஏ' மற்றும் 'பி' பிரிவு அரசு ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்திருந்தது. மேலும் போனஸ் தொகை 30 நாட்கள் சம்பளத்திற்கு இணையாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தது.
ஆனால், வழக்கம்போல, இந்த வருடமும் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதில், "'சி' மற்றும் 'டி' பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.3,000 வழங்கப்படும். சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பல்வேறு துறைகளில் தொகுப்பூதியம் பெறும் பணியாளர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.1,000 வழங்கப்படும்.
சி மற்றும் டி பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், சத்துணவு, அங்கன்வாடி போன்றவற்றில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள், குடும்ப ஓய்வூதியர்களுக்கு பொங்கல் போனஸ் ரூ.500 வழங்கப்படும்" என அறிவிக்கப்பட்டுள்ளது.