தமிழகம் முழுவதும் அரசு விரைவு பேருந்து ஓட்டுனர்களுக்கு.. அரசு கடும் எச்சரிக்கை.. புது அறிவிப்பு
அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை இனி வலதுபுறம் நிறுத்த வேண்டும்
சென்னை: தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளை சாலையின் வலது புறமாக நிறுத்தினால், ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போகிறது.. இதனால் அநியாய மரணங்களும் உயர்ந்து கொண்டே வருகின்றன..
யார் அந்த 3 பேர்.. சூட்கேஸில் சடலம்.. பியூட்டி பார்லர் பெண் கொலையில்
இதற்கு முக்கிய காரணமாக, போக்குவரத்து விதிகளை யாரும் சரியாக கடைப்பிடிக்கப்படுவதில்லை என்றே கூறப்பட்டு வருகிறது.
போக்குவரத்து
ஏற்கனவே இரு வழி சாலையானது, தங்கநாற்கர சாலை திட்டத்தின்கீழ் நான்கு வழி சாலையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.. விபத்துக்களை குறைக்க இந்த வழித்தடம் பெரிதும் உதவுகிறது.. அதேபோல, தமிழகம் முழுவதும் விபத்துக்களை தடுக்கும் வகையில், போக்குவரத்துக்கு இடையூறான பகுதிகளில் மேம்பாலங்கள் அதிக அளவு கட்டப்பட்டுள்ளன..
மின் விளக்குகள்
இதைதவிர சாலையின் நடுவே தடுப்பு சுவர்களும் கட்டப்பட்டு, மின்விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.. எல்லாவற்றிற்கும் மேலாக, சாலையோரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்துவதற்கும், விரைவு பேருந்துகள் நெடுந்தொலைவுகளில் அதிகம் வருவதால் உணவு சாப்பிடவும், தேசிய நெடுஞ்சாலையின் ஓரங்களில் டீ கடைகளும், மோட்டல்கள் என்று சொல்லப்படும் உணவகங்களும், அதிக அளவு இயங்கி வருகிறது.. இவ்வளவு இருந்தும் விபத்துக்கள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அறிவிப்பு
இப்படிப்பட்ட சூழலில்தான், விபத்துக்களை குறைக்கும் நோக்கில் போக்குவரத்து துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காக நிறுத்தும்போது, பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது... அரசு விரைவுப் பேருந்தின் கிளை மேலாளர்கள், கோட்ட மேலாளர்கள் ஆகியோருக்கு பொது மேலாளர் இதுகுறித்து சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இடதுபுறம்
அதில், "அரசு விரைவுப் பேருந்துகள் பயணத்தின்போது உணவு நேரத்திற்காகப் பேருந்துகளை நிறுத்தும்போது பயணிக்கும் திசையின் இடதுபுறத்தில் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இடதுபுறம் நிறுத்தாமல் எதிர்த் திசையில் உள்ள உணவகத்திற்கு வாகனத்தைத் திருப்பும்போது விபத்துகள் ஏற்பட்ட வாய்ப்புள்ளது. எனவே கட்டாயம் பேருந்துகளை இடதுபுறம் உள்ள உணவகத்தில்தான் நிறுத்த வேண்டும். இதை மீறும் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஓட்டல்கள்
தொலைதூர பயணங்களுக்கு பெரும்பாலும் மக்கள் இரவு நேரத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள்.. நள்ளிரவு நேரங்களில், பயணிகள் சாப்பிடுவதற்காக, குறிப்பிட்ட ஓட்டல்களிலேயே தங்கள் பஸ்களை டிரைவர்கள் நிறுத்தி கொள்கிறார்கள்.. அப்படி நிறுத்தப்படும் இடங்களில், வேறு ஓட்டல்கள் எதுவும் அந்த பகுதிகளில் இருப்பதும் இல்லை.. அதனால், அவர்கள் சுட்டிக்காட்டும் ஓட்டல்களில் வேறு வழியில்லாமல் பயணிகள் சாப்பிடும் சூழல் ஏற்படுகிறது.. அந்த ஓட்டலில் நிர்ணயிக்கப்படும் விலையோ அதிகமாக இருப்பதாக ஏற்கனவே பொதுமக்கள் புலம்பி வருகின்றனர்.
பொதுமக்கள் புலம்பல்
சில சமயம், இந்த ஹோட்டல்கள் எதிர்புறத்தில் இருப்பதால், நெடுஞ்சாலைகளை கடந்துதான் பயணிகள் ஓட்டலுக்கு செல்ல வேண்டி உள்ளது.. இதுவும் விபத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது. பெரும்பாலும் அசைவ உணவுகளை, குறிப்பாக பிரியாணிகளை விற்கப்படுகிறது.. எந்த ஓட்டலாக இருந்தாலும் மதியம் 12 மணிக்கே பிரியாணி தயாராகிவிடும்.. இதற்காக காலையிலேயே பிரியாணி செய்யும் பணி ஆரம்பமாகும்.. காலையில் செய்யும் பிரியாணியை நள்ளிரவு 2 மணி வரை வைத்து பயணிகளுக்கு வினியோகம் செய்வதும் ஆங்காங்கே நடக்கிறது.. ஹோட்டல் ஆட்கள், கூட்டு வைத்து இப்படிப்பட்ட பிரியாணிகளை மக்கள் தலையில் கட்டிவிடுகிறார்கள்..
பிரியாணி
ஒருபக்கம் உணவின் விலை அதிகரிப்பு, மறுபக்கம் சுகாதாரம், தரமற்ற சாப்பாடு, இதற்கு நடுவில் சாலைகளை கடந்து சென்று, உயிரை பணயம் வைத்து, சாப்பிடுவதை நினைத்து மக்கள் கதிகலங்கிவிடுகின்றனர்.. இதற்கெல்லாம் ஒரு கடிவாளம் போட்டுள்ளது போக்குவரத்து நிர்வாகம்.. இனி பஸ்களை சாலையின் வலது புறமாக நிறுத்தினால், ஓட்டுனர், நடத்துனர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிர்வாகம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சாலை விபத்துகள் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக நம்பப்படுகிறது.