ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. மெரினாவில் ஜெயலலிதாவிற்கு சுமார் ரூ.50 கோடி நிதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது என்று அவர் வழக்கு தொடுத்தார்.
மனுவில் என்ன தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது சரியான செயல் கிடையாது. இது வருங்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதேபோல் இந்த கட்டுமானம் விதிகளை மீறி கட்டுப்படுகிறது. அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.ரவி மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
அரசு வாதம்
இந்த வழக்கில் நடந்த வாதங்களின் போது, தமிழக அரசு ''ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான செயல் கிடையாது. அவர் இறந்த போது குற்றவாளி கிடையாது. அவர் இறந்த பின்பே சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதேபோல் இது அரசின் கொள்கை முடிவு.'' என்று தமிழக அரசு கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.
தீர்ப்பு
அதில் மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் இந்த நினைவிடம் அமைக்க எந்த தடையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
என்ன விளக்கம்
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார். அவர் இறந்த போது தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அவரை சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது. அதனால் அவருக்கு அரசு நினைவிடம் அமைப்பதில் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.