3 நகராட்சிகள் 11 ஊராட்சிகளை இணைத்து.. பிறந்தது ஆவடி மாநகராட்சி
புதிய மாநகராட்சியாக ஆவடி தரம் உயர்த்துப்பட்டள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தின் 15வது மாநகராட்சியாக சென்னையை அடுத்துள்ள ஆவடி நகராட்சி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
ராணுவ தளவாட ஆலை, ராணுவத்துக்கான ஆடை தயாரிக்கும் ஆலை என பல சிறப்புகளை உடையது ஆவடி. உட்கட்டமைப்பு வசதிகளை நிறைவேற்றுவதற்காக நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்டகாலமாகவே கோரிக்கை விடுத்து வந்தனர்.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உள்பட மொத்தம் 14 மாநகராட்சிகள் ஏற்கனவே இருக்கும் நிலையில் தற்போது மேலும் ஒருசில நகராட்சிகளை மாநகராட்சியாக மாற்ற தமிழக அரசு திட்டமிட்டது. இதில் ஆவடியும் ஒன்று.
ஆவடி அறிவிப்பு
ஆவடியை மாநகராட்சியாக மாற்றுவதற்கான பரிந்துரை தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளதாகவும், பரிசீலனையில் உள்ள இந்த பரிந்துரை வெகுவிரைவில் அமல்படுத்தப் போவதாகவும் ஏற்கனவே சொல்லப்பட்டன. இந்த நிலையில், இன்று 15-வது மாநகராட்சியாக உருவாகி உள்ளது. இதனால் தமிழகத்தின் 15வது மாநகராட்சி என்ற பெயரை பெற்றுள்ளது ஆவடி!
மகிழ்ச்சி
புதிய மாநகராட்சியில், ஆவடி, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. மேலும் நெமிலிச்சேரி, வானகரம் உள்ளிட்ட 11 ஊராட்சிகளும் ஆவடி மாநகராட்சியுடன் இணைந்துள்ளன. இதனால் அந்த பகுதி மக்கள் மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்!
தாமதம்
சென்னை மாநகரில் நிலவி வரும் கடும் நெரிசலைக் குறைக்கும் வகையில் தாம்பரம், ஆவடிகளை தனி மாநகராட்சிகளாக அறிவிக்கும் திட்டம் கடந்த திமுக ஆட்சியில் யோசிக்கப்பட்டது. மேலும் இவற்றை சென்னையுடன் இணைக்கவும் முதலில் திட்டமிடப்பட்டது. பின்னர் அது தாமதமானது. இந்த நிலையில்தான் தற்போது ஆவடியை மாநகராட்சியாக அதிமுக அரசு அறிவித்துள்ளது.
மக்கள் தொகை
ஆவடி மாநகராட்சியானது தொழிற்சாலைகள் நிறைந்த மாநகராட்சியாக அமையும். இதன் பரப்பளவு கிட்டத்தட்ட 148 சதுர கிலோமீட்டர். இந்த மாநகராட்சியில் மக்கள் தொகை மிகவும் குறைவுதான். அதாவது 6.12 லட்சம் பேர்தான் இருப்பார்கள். இங்கு 80 முதல் 100 வார்டுகள் வரை உருவாக்கப்படும் என்று தெரிகிறது.