டெல்லி டூ தமிழ்நாடு.. வேகம் எடுக்கும் கொரோனா.. 234 பேர் பாதிப்பு.. தீவிர தடுப்பு நடவடிக்கையில் அரசு!
616 பேரை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது
சென்னை: தமிழகத்தில் ஆபத்து சூழ்ந்துள்ளது... தமிழகத்தில் இன்று ஒரே நாளில், மேலும் 110 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.. இவர்கள் அனைவருமே டெல்லி சென்றுவிட்டு திரும்பியவர்கள் என்பதும் உறுதியாகி உள்ளது.. இதில் ஒருசிலர் தானாக முன்வந்து பரிசோதனைக்கு உட்படுத்தி கொண்டு வருகின்றனர்.. எனினும் இவர்கள் யார் யாருடன் இதுவரை தொடர்பில் இருந்தார்கள் என்பது தெரியாததால், இக்கட்டான சூழலில் தமிழகம் உள்ளது.. எனினும் எந்தவிதத்திலும் மாநிலத்தில் ஆபத்து கவ்விவிடக் கூடாது என்பதிலும் தமிழக அரசு துரித மற்றும் தீவிர நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது!
Recommended Video
நேற்று மட்டும் ஒரே நாளில் 57 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டது.. இவர்களில் 50 பேர் டெல்லிக்கு சென்று திரும்பியவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியானது.. மொத்தமாக இதுவரை தமிழகத்தில் 124 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று சொல்லும்போது, மாநாட்டுக்கு சென்றவர்கள் யார் யார் என கண்டறிந்து, 1131 பேரில் 515 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்.. அவர்கள் தனிமைப்படுத்தவும்பட்டுள்ளனர்.. மீதமுள்ளவர்கள் எங்கே என தெரியவில்லை.. அவர்களுக்கு போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.. எனவே அவர்களாகவே தானாகவே முன் வர வேண்டும்" என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அந்தவகையில் பலரும் வேண்டுகோளை ஏற்று பரிசோதனைக்கு முன் வந்துள்ளனர்.. வேண்டுகோளை ஏற்று பரிசோதனைக்கு முன்வந்தவர்களுக்கு பீலே ராஜேஷ் நன்றி தெரிவித்திருக்கிறார்.. எனினும் ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கூறப்பட்டுள்ளது.. நேற்றைய கணக்குப்படி கொரேனா பாதிப்பு அதிகமாக உள்ள மாநிலங்களில் நாட்டிலேயே தமிழகம் 3வது இடத்தை பிடித்திருந்தது.. முதலிடத்தில் கேரளா அதாவது 234 பேர், 2வது இடத்தில் மஹாராஷ்டிரா, 216 பேர், அடுத்த இடத்தில் தமிழகம் என்றிருந்தது. இன்று ஒரே நாளில் மேலும் 110 பேர் என்று உறுதியாகி உள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 234-ஆக அதிகரித்து தமிழகம் முந்திகொண்டு வருகிறது.
ஈரோட்டில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.. தாய்லாந்து நாட்டினர், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள், டெல்லி போய் திரும்பியவர்கள் என மொத்தம் 23 பேர் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 58 பேர் கொரோனா சிறப்பு வார்டுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 100-க்கும் மேற்பட்டோடர் அறிகுறிகளுடன் பெருந்துறை போக்குவரத்து மருத்துவ கல்லூரி மருததுவமனையில அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவையை பொறுத்தவரை 61 பேர் டிராக் செய்யப்பட்டு, அவர்களில் அறிகுறிகள் இருந்த 44 பேருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டிருக்கிறது... அந்த டெஸ்ட் ரிசல்ட்கள் இன்னும் வெளியாகவில்லை... டிராக் செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும் டெஸ்ட்கள் செய்யப்படுகிறது. இன்று வெளிவந்த அதிகாரப்பூர்வ தகவல்படி மொத்தம் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, தேனி மாவட்டத்திலும் மாநாட்டுக்கு சென்றவர்கள் யார் என்ற தேடும் பணி ஆரம்பமானது.. இப்போதைக்கு 21 பேர் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது...அவர்கள் அனைவரையும் கானாவிலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அழைத்து வந்து பரிசோதனையும் செய்யப்பட்டது.. எல்லாருமே கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுதான் இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். ஆனால் இவர்களில் யாருக்கும், காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறி இல்லை... எனினும் ரத்தம், சளி மாதிரிகள் டெஸ்ட்டுக்கு அனுப்பப்பட்டு தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் 20 பேருக்கு தொற்று உறுதியானதாக சொல்லப்பட்டுள்ளது.
சேலத்தை பொறுத்தவரை, கொரோனா பாதித்த இந்தோனேசியர்கள் சென்று வந்த மசூதியை சுற்றியுள்ள தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் இருந்து வந்த இஸ்லாமிய மதபோதகர்கள் உட்பட 16 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், இவர்களில் 5 பேருக்கு கொரோனா உறுதியானது... 2 பேர் தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 61 வயது முதியவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், இந்தோனேசியர்கள் மதபோதனைக்காக சென்ற பகுதிகளான களரம்பட்டி, கிச்சிப்பாளையம், சூரமங்கலம், செவ்வாய்ப்பேட்டை, சன்னியாசிகுண்டு, அம்மாப்பேட்டை ஆகிய பகுதிகளில் தீவிர சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 350க்கும் மேற்பட்ட வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 25 ஆயிரம் வீடுகளுக்கு நேரடியாக சென்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.
புதுக்கோட்டையில் வெளிநாட்டுக்கு சென்று விட்டு திரும்பி வந்தவர்கள் என கூறி 843 பேரை தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், வெளிநாட்டில் இருந்து நாடு திரும்பியவர்கள் எண்ணிக்கை 3 ஆயிரத்து 400 என்று ஏர்போர்ட் நிர்வாகம் சார்பில் தெரியவந்துள்ளது.. அதனால் மீதம் உள்ளவர்களை தேடும் பணியில் மாவட்ட நிர்வாகம் தீவிரமுடன் ஈடுபட்டு வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் 22 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது.. குறிப்பாக, மேலப்பாளையம் பகுதியில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதால், மேலப்பாளையம் பகுதி முற்றிலும் தனிமைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.. அதனால் யாருமே மேலப்பாளையம் எல்லைக்குள் வெளியே செல்ல அனுமதியே இல்லை.இன்று மட்டும் நெல்லையில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு திருவாரூர் திரும்பிய 26 பேர் திருவாரூர் அரசு ஆஸ்பத்திரியின் கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்... அனைவரிடமும் சளி, உமிழ்நீா், ரத்தம் உள்ளிட்ட மாதிரிகள் எடுத்து டெஸ்ட்க்கு அனுப்பப்பட்டுள்ளது. கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ள 26 பேரில் 13 பேர் மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் 71 பேர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.. அதில் 58 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது... தொற்று ஏற்பட்டுள்ள 5 நபர்களில் 4 நபர்கள் டெல்லி மதக் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் என்று தெரியவந்துள்ளது.
மேலும் மதுரையில் 9 பேரும், திருப்பத்தூர், செங்கல்பட்டில் தலா 7 பேருக்கும், சிவங்கையில் 5 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. அதேபோல திருவாரூர், தூத்துக்குடி, காஞ்சிபுரத்தில் தலா 2 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது. கரூர், சென்னை, திருவண்ணாமலையில் தலா ஒருவருக்கும் வைரஸ் தொற்று இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், குன்னூரில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு பேர் அறிகுறிகளுடன் இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் 4 பேருக்கு கொரோனா அறிகுறி உள்ளதும், ஒருவருக்கு உறுதியாகியுள்ளதாலும், மாவட்டம் முழுவதுமே பரபரப்பு தொற்றி கொண்டுள்ளது.. குன்னூரில் உள்ள மொத்த கடைகளையும் மூட உடனடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 4 பேர் தொற்று உறுதியாகி உள்ளதால், தொடர்பில் இருந்தவர்களையும் கண்காணிக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
இது எல்லாவற்றிற்கும் மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நபர்கள் வசிக்கும் சென்னை, மதுரை, திருநெல்வேலி, வேலூர், ராணிப்பேட்டை, சேலம், விருதுநகர், ஈரோடு, அரியலூர், தஞ்சாவூர், திருப்பூர், செங்கல்பட்டு ஆகிய 12 மாவட்டங்களில் 1,08,677 வீடுகளில் இருந்த 3,96,147 நபர்களிடம் ஆய்வு மேற் கொள்ளப்பட்டுள்ளது.
இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் சுகாதாரத்துறை தீவிர கண்காணிப்பை முன்னெடுத்து வருகிறது... முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் "கொரோனா தொற்று 2-ஆம் கட்டத்தில் இருப்பதாகவும், அது 3-ஆம் கட்டத்திற்கு பரவாமல் இருக்க பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தந்து, தங்கள் வீட்டிலேயே இருப்பது மிகவும் அவசியம் என்று நிபுணர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.. உங்களின் நன்மைக்காகவும், உங்கள் குடும்பத்தின் நன்மைக்காகவும், நம் நாட்டின் நன்மைக்காகவும், பொதுமக்கள் அனைவரும் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
தற்போது இதில் முக்கிய பிரச்சனையாக பார்க்கப்படுவது டெல்லியில் இருந்து திரும்பியவர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளதுதான்.. இவர்கள் யார் யாருடன் தொடர்பில் இருந்து வந்தார்கள், யார் யாரை சந்தித்தார்கள் என்று தெரியவில்லை.. ஏனென்றால் இந்த வைரஸை பொறுத்தவரை, பாதிக்கப்பட்டவர் யாராகிலும் வெளியில் சுதந்திரமாக அறியாமையில் நடமாடினால் கூட, ஒரே வாரத்தில் அவர் மூலமாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று பரவும் என்று அன்புமணி ராமதாஸ் கூட ஒரு அறிக்கையில் எச்சரித்திருந்தார்.. அதனால் இவர்களை சார்ந்தவர்கள் அனைவரையுமே கண்காணிப்பில் கொண்டு வர வேண்டி உள்ளது.. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்தபடியே உள்ளதால், தமிழக அரசு மிக மிக மும்முரமாக நடவடிக்கைகளை கையில் எடுத்துள்ளது.