பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. இதுதான் கடைசி நாள்.. மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது?
பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது
சென்னை: 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றினை தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது..
தமிழகத்தில் தொற்று பாதிப்பு இன்னும் குறையவில்லை.. ஒமிக்ரான் பரவலும் வேகமெடுத்து வருவதால், மீண்டும் லாக்டவுன் போடும் நிலைமையில் தமிழகம் உள்ளது...
இதனால் பள்ளி கல்லூரிகளையும் திறக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.. கடந்த 4 நாட்களுக்கு முன்பு அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது.
10,12ம் வகுப்பு திருப்புதல் தேர்வில் புது முறை அறிமுகம் - அப்போ பொதுத்தேர்வு நடக்குமா?
விடுமுறை
அதில், கொரோனா பெருந்தொற்று காரணமாக 1 முதல் 9 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, இப்போது 10 முதல் 12 வரையிலான வகுப்புகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.
தமிழக அரசு
மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கவும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு அறிவுறுத்தியிருந்தது.. எனவே, 10, 11, 12ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது..
ஆலோசனை
எனினும், 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை செய்து வருகிறது... அதேபோல, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டிய பொறுப்பு, அந்தந்த பள்ளிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த பணிகளும் துரிதமாக நடந்து கொண்டிருக்கின்றன.
சேகரிக்கும் பணி
மாணவ, மாணவிகளின் பெயர்கள், பிறந்த தேதி, தந்தை பெயர் உள்ளிட்ட முழுமையான விவரங்களை சேகரிக்கும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருவதுடன், அவைகளை தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கையிலும் இறங்கி உள்ளனர்... இதற்கான காலக்கெடுவும் விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தேர்வுத்துறை கடிதம் ஒன்றினையும் அனுப்பி உள்ளது.
பொதுத்தேர்வு
அதில், "நடப்பு 2021-22 கல்வி ஆண்டிற்கான பொதுத்தேர்வு எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் பெயர்ப் பட்டியல்களை தயாரித்து ஜனவரி 4 முதல் 19ஆம் தேதி வரை இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்ய உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது... தேர்வுக் கட்டணம் மற்றும் மதிப்பெண் பதிவேற்றுக் கட்டணத்தையும் இணையதளம் வாயிலாக செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.ஆனால் சில பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை பதிவேற்றம் செய்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
விவரங்கள்
இதன் காரணமாக மாணவர்கள் விவரங்களை பதிவேற்றவும், கட்டணம் செலுத்தவும் ஜனவரி 20 முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது. இதுவே இறுதி வாய்ப்பு. எந்தக் காரணம் கொண்டும் கூடுதல் கால அவகாசம் வழங்கப்படாது. எனவே தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை கொண்டு விரைவாக பணிகளை முடிக்க முதன்மை கல்வி அலுவலர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.