தமிழ்நாட்டில் உணவகங்களில் 50% பேர் மட்டுமே அனுமதி.. வேறு என்னென்ன கட்டுப்பாடுகள்?.. முழு விவரம்
சென்னை: தமிழ்நாட்டில் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் கடந்த 5 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது.
வட கடலோர மாவட்டங்களில் 5 நாட்களுக்கு லேசான மழை...சென்னைவாசிகளும் அனுபவிக்க தயாராகுங்கள்
தொற்று பாதிப்பு 30,000-க்கும் கீழே குறைந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்ததை அடுத்து கடந்த 6-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமலானது.
ஊரடங்கு முழுமையாக ரத்து
தற்போது கொரோனா பாதிப்பு ஊரடங்கு கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். கொரோனா குறைந்து வருவதால் தளர்வுகள் கொடுக்கலாமா என்பது பற்றி ஆலோசனை செய்யப்பட்டது. இதனால் ஊரடங்கு ரத்து செய்யப்படும் என்ற தகவல் பரவியது. இந்த நிலையில் தமிழகத்தில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்டுவதாக அரசு அறிவித்துள்ளது.
பல்வேறு கட்டுப்பாடுகள்
இதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற 30-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1-ம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளும் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில் பல்வேறு கட்டுப்பாடுகளும் தொடர்கின்றன. அதன் விவரம் பின்வருமாறு:-
அரசியல் கூட்டங்கள் நடத்த தடை
* சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொது மக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு தடை தொடரும்.
* நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையத்தினால் வெளியிடப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்ற வேண்டும்.
* மழலையர் விளையாட்டு பள்ளிகள் (Play Schools), நர்சரி பள்ளிகள் (LKG, UKG) செயல்பட அனுமதி இல்லை.
* பொருட்காட்சிகள் நடத்த அனுமதி இல்லை.
* அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி இல்லை.
உணவகங்கள், துணிக்கடைகள், நகைக்கடைகள்
* உணவகங்கள், விடுதிகள், அடுமணைகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 50% வாடிக்கையாளர்கள் மட்டும் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்.
* திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 100 நபர்களுடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும்.
* இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.
* துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகளில் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல் செயல்படுவதை உறுதி செய்யுமாறு உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தியேட்டர்கள் செயல்படலாமா?
* கேளிக்கை விடுதிகளில் (Clubs) உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுக்கள், உணவகங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் யோகா பயிற்சி நிலையங்கள் ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனைத்து திரையரங்குகளிலும் (Multiplex/ Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* உள் விளையாட்டு அரங்குகளில் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி 50% பார்வையாளர்களுடன் விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதிக்கப்படும். வழக்கமான பயிற்சிகள் நடத்த தடையில்லை.
Recommended Video
அழகு நிலையங்கள், சலூன்கள்
* அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்கங்கள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள் அதிகபட்சம் 50% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படும்.
* அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Salons and Spas) போன்றவை ஒரு நேரத்தில் 50% வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.
* அனைத்து பொழுதுபோக்கு/கேளிக்கைப் பூங்காக்கள் (Entertainment/Amusement parks) நீர் விளையாட்டுகளைத் (Water sports) தவிர்த்து, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவிகிதம் வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
* வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் பணிபுரிபவர்கள், உரிமையாளர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.