உடல்நிலையை கருத்தில் கொண்டு.. பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோல் நீட்டிப்பு!.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வந்த பேரறிவாளன் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பேரறிவாளனுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் அவருக்கு 30 நாட்கள் பரோல் வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு, அவரது தாயார் அற்புதம்மாள் கடந்த ஏப்ரல் மாதம் கோரிக்கை விடுத்தார்.
ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பேச,கேட்க முடியாத மாற்றுத்திறனாளி கோவை இளைஞர்... இந்தியாவின் முதல் ஐஏஎஸ்
பரோலில் இருக்கும் பேரறிவாளன்
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கியது. கடந்த மே மாதம் 28-ம் தேதி சிறையில் இருந்து பரோலில் வந்த பேரறிவாளன், ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டுக்கு சென்றார். சிறுநீரக தொற்று உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பேரறிவாளன் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.
மூன்று முறை நீட்டிப்பு
இதனைத்தொடர்ந்து மருத்துவ காரணங்களுக்காக பேரறிவாளனின் பரோல் மூன்று முறை நீட்டிக்கப்பட்டது. அவர் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நல பிரச்சினைக்காக விழுப்புரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நாளையுடன் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்தன.
சீமான் கோரிக்கை
இதுகுறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ' அன்புத்தம்பி பேரறிவாளன் அவர்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில் நாளையோடு சிறைவிடுப்பு நிறைவடைகிற செய்தியறிந்தேன்.தம்பியின் உடல்நலனையும், மருத்துவச்சிகிச்சையையும் கருத்தில்கொண்டு அவரது சிறைவிடுப்பை நீட்டிக்கவேண்டுமென தமிழக முதல்வரிடம் கேட்டுக்கொள்கிறேன்' என்று கூறி இருந்தார்.
ஒரு மாத காலம் நீட்டிப்பு
இந்த நிலையில் சீமானின் கோரிக்கை உள்பட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டுள்ளார். நாளையுடன் பரோல் காலம் முடிவடைய உள்ள நிலையில், பேரறிவாளன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மேலும் ஒரு மாத காலம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.