நல்லகண்ணு அய்யாவுக்கு ஒரு வீடு.. ஒரு வழியாக வந்தது புது வீடு.. ஒதுக்கியது தமிழக அரசு!
நல்லகண்ணுவுக்கு வீடு ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது
சென்னை: "எனக்கு வீடு இல்லேன்னாலும் பரவாயில்லை.. கக்கன் குடும்பத்தை வெளியேற்ற வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டவர் நல்லகண்ணு.. தற்போது இருக்கும் வீட்டை காலி செய்து விட்டு, வேறு இடம் ஒதுக்குவதாக அரசு சொன்னபோது,"சாவியை தூக்கியெறிங்க ஐயா.. அந்த வீடு வேணாம் நமக்கு" என்று அன்றே கொந்தளித்தனர் நெட்டிசன்கள். ஆனால், இன்று நல்லகண்ணுவுக்கு தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணையை வெளியிட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு... இவர் கடந்த 12 வருஷமாக திநகரில் உள்ள கவர்ன்மென்ட் குவார்ட்டர்ஸில்தான் குடியிருந்தார்.
மிக எளிமையான வீடு அது.. உள்ளே நுழைந்ததுமே நான்கைந்து சேர்கள் போடப்பட்டிருக்கும்.. பக்கத்திலேயே நிறைய புத்தகங்களும், தினசரி பேப்பர்களும் குவிந்திருக்கும்.
கடலைமிட்டாய்
நல்லகண்ணுவை பார்க்க எப்பேர்ப்பட்ட பிரபலங்கள், தலைவர்கள் வந்தாலும் சரி, அந்த சின்ன ஹாலில்தான் சந்திப்பு நடக்கும்.. பிரியமுடன் பார்க்க யார் வந்தாலும் அவர்களுக்கு இடுப்பு வேட்டியில் மடித்து சுருட்டி வைத்திருக்கும் கடலை மிட்டாயை எடுத்து தருவது நல்லகண்ணுவின் பல வருட பழக்கம்.. அது இன்றும் உள்ளது!
மாத வாடகை
அந்த வீடு அவருக்கு இலவசமாக வழங்கியதுதான். ஆனால், கொள்கைக்கு எதிரானதாக உள்ளதே என்று கூறி, இலவசமாக தந்த வீட்டுக்கு மாதா மாதம் வாடகை தந்து வந்தார். இந்நிலையில், சென்னை மாநகராட்சி அந்த இடத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்காக ஒரு புதிய திட்டத்தை கொண்டுவர போகிறோம் என்று சொல்லி நல்லகண்ணு உள்ளிட்ட அங்கிருந்தவர்களை உடனே வெளியேறுமாறு அரசு தரப்பில் உத்தரவு ஒன்று சில மாதங்களுக்கு முன்பு பிறப்பிக்கப்பட்டது.
நெட்டிசன்கள்
இதேபோல் கக்கன் குடும்பத்தினரும் வீட்டை காலி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இதற்கு கட்டுப்பட்டு நல்லகண்ணு வெளியேறினார்.. இந்த நிகழ்வினை பார்த்த தமிழக மக்கள் கொந்தளித்து போய்விட்டனர்... நல்லக்கண்ணுவை அங்கிருந்து வெளியேற்றியது தவறு என்று கண்டனங்களை தெரிவித்தனர்.. அரசு மீது குற்றஞ்சாட்டினர்!
நெருக்கடி
நல்லகண்ணு அய்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தாமல், அரசு சார்பில் உடனடியாக வீடு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் கோரிக்கை வைத்தனர். இது பற்றிசொல்லும்போது, "எங்களுக்கு பரவாயில்லை... காமராஜர் காலத்தில் அமைச்சராக இருந்த கக்கனுக்கு, எம்ஜிஆர் ஆட்சிகாலத்தில் வீடு தந்தாங்க.. வாடகை இல்லாமலே இருந்தார்... இப்போது அவர் குடும்பத்தினர் அங்கு இருக்கிறாங்க. அவங்களை வெளியேற்ற வேண்டாம்.." என்று நல்லகண்ணு கேட்டுக் கொள்ளவும் செய்தார்.
வாடகை வீடு
இந்த சமயத்தில்தான் நல்லகண்ணுவிடம் துணை முதல்வர் போனில் பேசி சமாதானம் செய்தார்.. நல்லகண்ணு, கக்கன் குடும்பத்தினருக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படும் என்றும் சொல்லப்பட்டது. உடனே நெட்டிசன்கள் பொங்கிவிட்டனர்.. "வேணாம் ஐயா.. அவங்க வீடு ஒதுக்க சாவி தந்தால் தூக்கி எறிஞ்சிடுங்க.. அவங்க வீடு எதுவும் ஒதுக்க வேணாம்.. நாங்க உங்களுக்கு வாடகை தர்றோம்" என்று இணையவாசிகள் கொதிப்புடன் பதிவுகளை போட்டிருந்தனர்.
அரசு ஒதுக்கீடு
இதன்பிறகு கேகேநகரில் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார் நல்லகண்ணு.. இந்த வீடு சற்று விசாலமாக இருக்கும்.. தெருவின் மூலையில் ஒட்டி இருந்தாலும் அமைதியான சூழலும், நிழல் படர்ந்த வீடு இது.. இந்நிலையில், தற்போது தமிழக அரசு வீடு ஒதுக்கி அரசாணையை வெளியிட்டுள்ளது... சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் நல்லகண்ணுவிற்கு இந்த வீட்டினை அரசு ஒதுக்கி உள்ளது.. யார் மனசையும் இதுவரை புண்படுத்த தெரியாத நல்லகண்ணு எப்படியும் அரசு தந்த இந்த வீட்டிற்குள் குடியேறுவார் என்றே தெரிகிறது.
குடியேறுவார்
தேவையில்லாமல் வீட்டை காலி செய்ய சொல்லி.. மக்கள் கண்டனத்துக்கு ஆளாகி.. பிறகு நல்லகண்ணுவை சமாதானப்படுத்தி.. இறுதியில் இப்போது அரசு சார்பில் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதை வரவேற்கவே செய்யலாம்.. நமக்குதான் அன்று இது நெருடலாகவும், வருத்தமாகவும் இருந்ததே தவிர, அப்பழுக்கற்ற பொதுவாழ்வில் உள்ள கரைபடியா காம்ரேடுக்கு இதுவெல்லாம் ஒரு பொருட்டே அல்ல!