தற்காலிக ஆசிரியர்களுக்கு தொகுப்பூதியம் ரூ. 7500லிருந்து ரூ. 10,000 ஆக அதிரடி உயர்வு
சென்னை: தமிழகம் முழுவதும் அரசு ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.இவர்களின் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு பள்ளிக் கல்வித் துறைக்கு ஆணை பிறப்பித்து உள்ளது. அவர்களுக்கான தொகுப்பூதியமும் உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று 4 வது நாளாக ஆசிரியர்கள் பணியைப் புறக்கணித்து, 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பள்ளியில் மாணவர்கள் ஆசிரியர்கள் இல்லாமல், தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் என்றும் தகவல்கள் வெளியாகி சர்ச்சையைக் கிளப்பி வருகின்றன.
இந்நிலையில், ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டுப் பணிக்குத் திரும்ப சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியும் போராட்டம் நின்றபாடில்லை. தமிழக அரசு சென்னை உயர் நீதி மன்றத்தில் ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வழக்குத் தொடர அனுமதி வேண்டும் என்று வைத்திருந்த கோரிக்கை மனுவையும் நீதி மன்றம் நிராகரித்தது.
இதையடுத்து அதிரடியாக முடிவெடுத்த தமிழக அரசு, ஆசிரியர்கள் போராட்டத்தை முறியடிக்கும் வகையில் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளது. இதற்கான விண்ணப்ப விநியோகமும் உடனடியாகத் தொடங்கி உள்ளது.
இந்த நிலையில் தற்காலிக ஆசிரியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியம் என்று அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது அதை மாற்றி மாதம் 10 ஆயிரம் ரூபாய் எனவும் அரசு அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.