இல்லத்தரசிகளுக்கு ஹாப்பி நியூஸ்! மார்ச் 8 முதல் மாதம் ரூ.1000? பரபர மீட்டிங்..வெளியான முக்கிய தகவல்!
சென்னை : குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும், முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக இருந்த நிலையில் 2021 சட்டமன்றத் தேர்தல் வந்தது. ஆளும் கட்சியாக இருக்கும் அதிமுகவை திமுக தலைவரான ஸ்டாலின் எதிர்கொண்டு தேர்தலை சந்தித்தார்.
திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை தான் அப்போது தமிழகம் முழுவதும் பேசு பொருளாக இருந்தது. பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் அதில் குறிப்பிட தகுந்த திட்டம் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்பதுதான்.
எடப்பாடி சொன்னது முழு பொய்.. பேனர் செலவு ரூ.611.. அதிமுக ஆட்சியில் தான் ஊழல்.. வறுத்தெடுத்த அமைச்சர்
மகளிருக்கு உரிமைத் தொகை
தமிழகம் முழுவதும் பெரிய அளவில் இந்த திட்டம் பேசப்பட்டது. ஏன் இந்தியா முழுமைக்குமே முன்னோடி திட்டமாக இது கருதப்பட்டது இதேபோல் அதிமுகவும் மகளிருக்கு உரிமைத் தொகை வழங்கும் என அறிவித்தது. திமுக தலைவர் ஸ்டாலின் தமிழகம் முழுவதும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஆயிரம் ரூபாய் உதவித்தொகை குறித்து பெரும்பாலும் பேசினார். இதேபோல திமுக மகளிர் அணி தலைவராக இருந்த கனிமொழி இளைஞரணி தலைவராக இருந்த உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் தங்கள் பிரச்சாரத்தின் போது இந்த திட்டத்தை மக்களிடம் அதிக அளவில் கொண்டு சென்றனர்.
எப்போது வழங்கப்படும்?
எதிர்பார்த்தது போல திமுக பெருவெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் ஆயிரம் ரூபாய் திட்டம் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. இரண்டு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் மகளிருக்கு உரிமை தொகை திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் எனவும் அறிவிப்புகள் இல்லை. இதனை அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கையில் எடுத்து தற்போது வரை பேசி வருகின்றன. திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டவாறு உரிமை தொகை எப்போது வழங்கப்படும் என எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் அறிக்கை பேட்டி என தீவிரம் காட்டி வருகின்றனர்.
பெருத்த ஏமாற்றம்
இந்நிலையில் தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலமான புதுச்சேரியில் மகளிர்க்கு உரிமை தொகை வழங்கப்படும் என கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். இதை அடுத்து தமிழகத்திலும் அறிவிப்பு எப்போது வெளியாகும் என எதிர்நோக்கி இருந்தனர் குடும்பத் தலைவிகள். நிதி பற்றாக்குறை காரணமாக தற்போது இந்த திட்டத்தை செயல்படுத்த முடியாது என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தது பெருத்த ஏமாற்றமாக இருந்தது.
பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மகளிருக்கு இலவச பேருந்து பயணம் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என பல்வேறு திட்டங்கள் திமுக அரசின் செயல்படுத்தப்பட்டாலும் உரிமை தொகை விவகாரம் தான் திமுகவுக்கு பின்னடைவாக கருதப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசி இருந்த தமிழக முதல்வர் ஸ்டாலின்,"தமிழகத்தின் நிதி நிலைமையை சரி செய்து கொண்டு இருக்கிறோம் நிதிநிலை சரியான பிறகு திட்டம் அமல்படுத்தப்படும் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டமானது நிச்சயம் நிறைவேற்றப்படும்" என்றார்.
மகளிர் உரிமைத் தொகை
இந்த நிலையில் தான் தற்போது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்துவதற்காக பணிகள் வேகம் எடுத்துள்ளன. இது தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை ஒன்றையும் நடத்தி இருக்கிறார். பல்வேறு பொருளாதார நிபுணர்களுடன் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஆலோசனை நடத்தியதோடு தனது ட்விட்டர் பக்கத்தில் 'முதல்வரின் புரட்சிகரமான உரிமை தொகை திட்டத்தின் செயல்முறைகள் மற்றும் பல தலைப்புகளில் வல்லுநர் குழுவுடன் நீண்ட கலந்துரையாடல் நடைபெற்றது. போலிச் செய்திகளை வைத்து திட்டமிட்டு அவதூறு பரப்பும் சக்திகள் நம்மை என்றைக்கும் சமூக நீதி இலக்கில் இருந்து திசை திருப்ப முடியாது" எனக் கூறியிருந்தார்.
அரசாணை
இதனால் விரைவில் மகளிருக்கு உரிமை தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிகிறது. இந்த நிலையில் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை மகளீர் தினமான மார்ச் 8 ஆம் தேதி தொடங்குவது தொடர்பாக தமிழக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. மேலும், முதலமைச்சருக்கு ஆலோசனை வழங்க அமைக்கப்பட்ட பொருளாதார வல்லுநர் குழுவுக்கு உதவ துணைக்குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.