புதிய ஆதார் கிட் திட்டம்… வீடு தேடி வருவார்கள்.. தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி
சென்னை : 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளும் திட்டத்தை 13 கோடி செலவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் குழந்தைகள், கருவுற்ற தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு, அவர்கள் வசிக்கும் கிராமங்களிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிமுகப்படுத்தி உள்ளார்.
13 கோடியே 61 லட்சம் ரூபாய் செலவில் கணினிகள், மடிக்கணினிகள், லேப்டாப்புகள், பயோ மெட்ரிக் இயந்திரங்கள் உள்ளடக்கிய 1,302 ஆதார் கிட் வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார்.
இந்த ஆதார் கிட்கள் 434 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களுக்கு வழங்கப்படும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். அதற்கு அடையாளமாக 7 குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு கணினி உள்ளிட்டவைகளை முதலமைச்சர் வழங்கி உள்ளார்.
மேலும், அங்கன்வாடி பணியாளர்களுக்கு 59 கோடியே 2 லட்சம் ரூபாய் செலவிலான பொதுவான மென்பொருள் பயன்பாடு என்ற செயலி பொருத்தப் பட்ட கைபேசி வழங்கும் திட்டத்தையும் முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.
அதன்மூலம், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அவர்களின் இல்லங்களுக்கே நேரில் சென்று ஆதார் எண் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்களுக்கு அவர்கள் வாழும் ஊரிலேயே முகாம்கள் அமைத்து ஆதார் எண் பதிவு செய்யும் வசதியும் ஏற்படுத்தப்படும்.