தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தயாராகுறீங்களா... அரசின் இந்த அறிவுறுத்தல்களை கொஞ்சம் பாருங்க!
Recommended Video
சென்னை : தீபாவளி பட்டாசு வெடிப்பதற்கான நேரம் மற்றும் பாதுகாப்பாக தீபாவளியைக் கொண்டாட பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களையும் தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பான தீபாவளியை கொண்டாடுவது எப்படி என்று தமிழக அரசு சார்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தீமை நன்மை வந்ததை நினைவு படுத்தும் விதமாகவும் நமது கலாச்சாரத்தையும், மரபையும் வெளிப்படுத்தும் விதமாகவும் இந்தியா முழுவதும் பட்டாசுகளை வெடித்து தீபாவளி பண்டிகை மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
பட்டாசு உற்பத்தி மற்றும் விற்பனைக்கு தடை கூறுவதற்கு உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் தமிழ்நாட்டில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஈடுபட்டுள்ள இரண்டு லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் நலனையும் கலாச்சாரத்தையும் பாதுகாப்பதற்காக தமிழக அரசு இந்த வழக்கில் தன்னையும் ஒரு வாதியாக சேர்த்துக்கொண்டது.
[சரவெடி வெடிக்காதீங்க.. மக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல் ]
உச்சநீதிமன்றம் 23. 10 .2018 ஆணையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மூலப் பொருட்களை பயன்படுத்தி பட்டாசுகள் உற்பத்தி செய்யவேண்டும் எனவும் வரும் காலத்தில் பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்து விற்பனை செய்ய வேண்டும் எனும் நிபந்தனைகளை விதித்தது. பட்டாசு வெடிப்பதால் காற்றின் தரம் பாதிக்கப்படுவது குறித்து போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் திறந்தவெளியில் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க மாநில அரசு வலியுறுத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தீபாவளியன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை என இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயித்துள்ளது. தமிழகத்தில் இந்த 2 மணி நேரத்தை தமிழக அரசு தீர்மானித்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு தீபாவளியன்று பட்டாசுகளை வெடிப்பதற்கு காலை 6 முதல் 7 மணி வரையும் இரவில் 7 முதல் 8 மணி வரையும் அனுமதி வழங்குகிறது.
தமிழ்நாட்டின் அனைத்து மாநகராட்சிகளிலும் தீபாவளிக்கு முன்பு ஏழு நாட்களும் தீபாவளிக்கு பின்பு ஏழு நாட்களும் மொத்தம் 14 நாட்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் காற்றின் தரத்தை அளவீடு செய்யும்.
மாசில்லா சுற்றுச்சூழலை பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும் இதனை கருத்தில் கொண்டு பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவதற்கு பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டியவை என அரசு தெரிவித்துள்ளது:
1. பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் குறைந்த அளவில் மாசுபடுத்தும் தன்மை கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டும்
2. உள்ளாட்சி அமைப்புகளின் முன் அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் ஒன்றுகூடி கூட்டாக வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நல சங்கங்கள் மூலம் முயற்சிக்கலாம்
தவிர்க்கவேண்டியவை
1. அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்கக் கூடிய வெடிகளை தவிர்க்கலாம்
2. மருத்துவமனைகள் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதி காக்கப்படும் இடங்களில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும்
3. எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகில் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்று அரசு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது