கோயில்களில் தலையிடும் தமிழக அரசு... இந்த மாத இறுதியில் ரிட் மனு - சுப்ரமணிய சுவாமி.
சென்னை: அனைத்து சாதியினரும் அர்ச்சகர்கள் ஆகலாம் என்று கூறி இந்து கோவில்களின் மதிப்பை குறைக்க திமுக முயற்சி செய்கிறது. தமிழக அரசு தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறது என்று சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார். அரசுக்கு எதிராக இந்த மாத இறுதியில் ரிட் மனுவை தாக்கல் செய்யப்போவதாகவும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற, சட்டத்தின் வாயிலாக 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போவதாகவும், தேவைப்பட்டால் உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் எனவும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கூறியிருந்தார்.

சுப்ரமணியன் சுவாமியின் மிரட்டலுக்கு அஞ்சப்போவதில்லை என்றும் எதையும் எதிர்கொள்ள தயார் என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசுக்கு எதிராக ரிட் மனுவை தாக்கல் செய்யப்போவதாக சுப்ரமணிய சுவாமி கூறியுள்ளார்.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்ட மசோதா, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் 51 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்டது. எனினும், வழக்குகள் காரணமாக அதை நிறைவேற்ற முடியாமல் இருந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 58 கோவில்களில் 29 ஒதுவார்கள் உள்பட 58 பேருக்கு, 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற, சட்டத்தின் படி கடந்த மாதம் பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். அரசின் இந்த நடவடிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுப்ரமணியன் சுவாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிகுந்த சிரமங்களுக்கு இடையேதான் முதலமைச்சராகி இருக்கிறார். தி.க. ஆட்களின் பிடியில் சிக்கி, தவறான செயல்பாடுகளை, அரசு அதிகாரத்தின் வாயிலாக செய்கிறார் என்று கூறினார்.
தி.க. சொன்னதை கேட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற மந்திரத்தை கையில் எடுத்து, பயிற்சி முடித்த 58 பேருக்கு அவசரமாக பணி நியமன ஆணைகள் வழங்கி இருக்கிறார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி உள்ளிட்ட தலைவர்கள் இதை வரவேற்றுள்ளனர். 51 ஆண்டுகள் கழிந்த நிலையில், ஈ.வெ.ரா.,வின் கனவையும், கருணாநிதியின் லட்சியத்தையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார் என்று, தி.க.வினர் சொல்லி மகிழ்கின்றனர்.
இந்திய அரசியல் சட்டத்தின்படி தான் இந்து அறநிலைய சட்டம் - 1959 இயற்றப்பட்டது. அந்த சட்டத்தின் பிரிவு, 55-ன் படி, அறநிலையத் துறை கோவில்களில் பூசாரி, அர்ச்சகர், ஓதுவார் உள்ளிட்ட யாரை நியமனம் செய்ய வேண்டும் என்றாலும், அறங்காவலருக்கு தான் அதிகாரம் உள்ளது.
கோவிலை நிர்வகிக்கும் முழு அதிகாரமும் அவருக்கே இருக்கிறது. அப்படி இருக்கும் போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? சட்டம் மிக தெளிவாக இருக்கும் போது, தன்னிச்சையாக அர்ச்சகர் நியமனத்தை மு.க.ஸ்டாலின் செய்திருப்பது அராஜகம். முதல்வர் என்பதால், அவர் இஷ்டத்துக்கு செய்ய முடியாது என்று கூறினார் சுப்ரமணியன் சுவாமி.
இப்படித்தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில், தீட்ஷிதர்களிடம் இருந்து நிர்வாக உரிமையை அரசு பறித்தது. அதற்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தேன். பின்னர், உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கிலும் வாதாடினேன். இறுதியில், நடராஜர் கோவிலை தீட்ஷிதர்களே நிர்வகிக்கலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் என்பது பல நுாற்றாண்டுகளாக, தீட்ஷிதர்கள் அனுபவித்து வரும் சிறப்பு உரிமை. அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அதேபோலவே, இப்போதும், அறங்காவலர் உரிமையில் அரசு தலையிட்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.
'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற அரசின் முடிவு தவறானது. அதனால், ஏற்கனவே தெளிவாக இருக்கும் பல்வேறு சட்டங்களை, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை மேற்கோள் காட்டி, முதல் கட்டமாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப் போகிறேன். தேவையானால், உச்ச நீதிமன்றம் வரை செல்வேன் என்றும் கூறியிருந்தார். ஆகவே, இந்த உத்தரவை உடனடியாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் திரும்ப பெற வேண்டும். இல்லையென்றால், அதற்கான விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அர்ச்சகர்களாக இருக்கும் பிராமணர்களுக்காக இதை செய்யவில்லை. அரசியல் சட்டத்தை மு.க.ஸ்டாலின் மதிக்காமல், இந்து மத கோட்பாடுகளில் தலையிடுகிறார். அதை தடுக்கவே போராடுகிறேன். இதை புரிந்து கொண்டு, மு.க.ஸ்டாலின் வாபஸ் பெற்றால் நீதிமன்ற கண்டனத்தில் இருந்து தப்பிப்பார் என்றும் சுப்ரமணியன் சுவாமி கூறியுள்ளார்.
இதற்கு பதிலடி தரும் வகையில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, 1954 சட்டப்படி பரம்பரை அர்ச்சகரை மாற்றலாம் என உள்ளது. சில ஊடகங்கள் பொய் பிரசாரம் செய்கிறது. மிரட்டலுக்கு பணியும் அரசல்ல திமுக அரசு. அரசியல் சட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை எங்கும் மீறவில்லை. விதிமீறலை சுட்டிக்காட்டினால் விளக்கம் அளிக்க தயாராக உள்ளோம் என்று கூறினார்.
இந்த நிலையில் தனது வழக்கறிஞர்கள் குழுவினருடன் ஆலோசித்து தமிழக அரசுக்கு எதிராக ரிட் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் சுப்ரமணியன் சுவாமி பதிவிட்டுள்ளார். திமுக சட்டத்தின் களஞ்சியமாக கோவில்களைக் குறைப்பதற்காக இந்து கோவில்களின் உரிமையில் தலையிடும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தமிழக அரசுக்கு சவால் விடும் வகையில் அட்வி விஷேஷ் கனோடியா தயாரித்த வரைவை இறுதி செய்ய எனது சட்டக் குழு நாளை கூடுகிறது. நான் இந்த மாத இறுதியில் ரிட் மனுவை தாக்கல் செய்யப்போகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.