போராடும் இடைநிலை ஆசிரியர்களை கைவிட்டுவிடாதீங்க... செங்கோட்டையனுக்கு வைகோ வேண்டுகோள்
Recommended Video
சென்னை: இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கைவிட்டுவிடக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சென்னை நுங்கம்பாக்கத்திலுள்ள பள்ளிக்கல்வி வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 23ம் தேதி முதல் அவர்கள் தங்களது போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். அவர்களில் 200 பேர் வரை உடல்நிலை பாதிப்படைந்துள்ளனர். திமுக, பாமக, அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதோடு, கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
வைகோ அறிக்கை
இந் நிலையில், இடைநிலை ஆசிரியர்களை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கைவிட்டுவிடக் கூடாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில் வைகோ கூறியிருப்பதாவது: இரண்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் டிசம்பர் 23-ம் தேதியிலிருந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களில் இதுவரை 200 பேர் உடல்நிலை பாதிக்கப் பட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
அறிக்கை தாக்கல்
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்காமல், ஒரு நபர் குழு அறிக்கை தாக்கல் செய்தால்தான் முடிவு எடுக்க முடியும் என்று பள்ளிக் கல்வித்துறைச் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் மிக அலட்சியமாகக் கூறி இருப்பது கண்டனத்துக்கு உரியது. ஒரே கல்வித் தகுதி , ஒரே பணி, ஆனால் இருவேறு ஊதிய விகிதங்கள். இந்த முரண்பாட்டைக் களைய வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் சங்கம் பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகிறது.
உறுதியளித்த ஜெயலலிதா
2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 8 நாட்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய ஆயிரக்கணக்கான இடைநிலை ஆசிரியர்களில் பலரின் உடல்நிலை மோசமானபோது, அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என்று உறுதி அளித்தார். ஆனால் இந்த நிலை தொடர்ந்து, 7வது ஊதியக் குழு நடைமுறையிலும் வஞ்சிப்பதை களையக்கோரி 2018ம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாநிலை அறப்போரில் ஈடுபட்டனர். இதையடுத்து, ஊதிய முரண்பாடுகள் குறித்து ஆய்வு செய்திட தமிழக அரசு ஒரு நபர் ஊதியக் குழுவை அமைத்தது.
நியாயமான கோரிக்கை
ஆனால், கடந்த 8 மாதங்களாக அந்தக் குழு தனது அறிக்கையை தரவில்லை. இடைநிலை ஆசிரியர்களின் சம வேலைக்கு சம ஊதியம் என்ற நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற உடனடியாக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள முன்வரவேண்டும். சிறப்பான முறையில் இயங்கி வரும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் இடைநிலை ஆசிரியர்களை கைவிட்டுவிடக் கூடாது. ஆசிரியர்களை அறப்போராட்டக் களத்தில் நீடிக்க விடுவது பள்ளிக் கல்வி துறைக்கு கரும்புள்ளி ஆகிவிடும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.