செம.. அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இட ஒதுக்கீடு! சட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்
சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுமதி வழங்கியுள்ளார்.
ஆளுநர் முடிவெடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டதால் நேற்று தமிழக அரசு அதிரடியாக, இந்த சட்டத்தை அரசாணையாக வெளியிட்ட நிலையில் இந்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களால் அதிக அளவில் தேர்ச்சி பெற முடியவில்லை. எனவே அவர்களின் மருத்துவ படிப்பு கனவு கலைந்து விடும் சூழ்நிலை உருவானது. இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஒரு அதிரடி முடிவை எடுத்தது. அதன்படி அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் களில் 7.5% உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று செப்டம்பர் 15ம் தேதி சட்டமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ரூ.2.5 லட்சம் நிதியுதவி.. பதிவு செய்ய வெப்சைட்.. நவீன் பட்நாயக் அசத்தல்
அச்ச நிலை
சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஆளுநர் அங்கீகாரம் அளிக்க வேண்டியது அவசியம். அந்த வகையில் செப்டம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. சுமார் 40 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் ஆளுநர் இதற்கு அனுமதி வழங்காமல் இருந்தார். இதனால் அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி கனவு கலைந்து விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. ஆளுநர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. அமைச்சர்கள் ஐந்து பேர் ஆளுநரை சந்தித்து இந்த சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தர வேண்டும் என்று வலியுறுத்தினர். அதன் பிறகும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருந்தார்.
அரசாணை வெளியானது
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகிவிட்ட நிலையில் அடுத்த கட்டமாக மருத்துவ கலந்தாய்வு தொடங்க வேண்டும் என்பதால், தமிழக அரசு நேற்று அதிரடியாக இந்த சட்டத்தை அரசாணையாக வெளியிட்டது. அதாவது ஆளுநர் அங்கீகாரம் இல்லாமலேயே சட்டம் அமலுக்கு வந்தது என்று அர்த்தம். இருப்பினும் அது தற்காலிக தீர்வுதான். இதை எதிர்த்து உயர் நீதிமன்றம் செல்லும் போது அது செல்லுபடியாகுமா, இல்லையா என்பது போன்ற பல்வேறு ஐயப்பாடுகள் இருந்தன.
சட்ட வல்லுநர் கருத்து
இந்த நிலையில் இன்று ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சொலிசிட்டர் ஜெனரலிடம் ஆளுநர் அறிவுரை கேட்டு இருந்ததாகவும், செப்டம்பர் 26-ஆம் தேதி ஆளுநர் அனுப்பிய கடிதத்திற்கு சொலிசிட்டர் ஜெனரல் தற்போது பதில் வழங்கியுள்ளதாகவும், அவரது கருத்தை பரிசீலித்து, இந்த சட்டத்திற்கு தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மகிழ்ச்சி
இதன் மூலம் அரசு பள்ளி மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இன்று நிருபர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இந்த விஷயத்தில் யாரும் அரசியல் செய்து விடமுடியாது. ஜெயலலிதா வழியில் வந்த இந்த அரசு ஒரு முடிவை எடுத்துவிட்டால் அதை செய்து காட்டியே தீரும் என்று சூளுரைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
303 மாணவர்களுக்கு பலன்
இந்த சட்டம் அமலுக்கு வந்ததும் அரசாணை செயலற்று போய்விடும். இதன் மூலம், 303 அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் சீட் கிடைக்கும். இந்த சட்டம் செயலுக்கு வந்திருக்காவிட்டால், வெறும், 8 அரசு பள்ளி மாணவர்களுக்குத்தான் சீட் கிடைத்திருக்கும். இதனிடையே, ஆளுநரை இன்று நேரில் சந்தித்து இதற்கு நன்றி தெரிவிக்க உள்ளார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.