சஞ்சய் தத் விவகாரத்தால் பெரும் நெருக்கடி... 7 தமிழர்களும் மே 23க்கு முன்பே விடுதலையாகும் வாய்ப்பு?
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேர், தேர்தல் முடிவு வெளியாக உள்ள மே 23ம் தேதிக்கு முன்பு விடுதலையாவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஏனெனில் தமிழக அரசு இதுவரை ஆளுநருக்கு பச்சை கொடி காட்டிவந்த நிலையில், சஞ்சய் தத் விடுதலை விவகாரம் காரணமாக மத்திய அரசுக்கு, தமிழக அரசியல் கட்சிகள் நெருக்கடி கொடுப்பதால், ஆளுநர் விரைவில் முடிவு எடுக்க வாய்ப்பு உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991ம் ஆண்டு மே21ம் தேதி தமிழகத்தின் ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தின் போது தற்கொலைப்படை தாக்குதலால் கொடூரமாக கொல்லப்பட்டார்.
சஞ்சய் தத்-திற்கு ஒரு நியாயம்; ஏழு தமிழர்களுக்கு ஒரு நியாயமா... திருமாவளவன் ஆவேசம்
ஆயுள் தண்டனை
இவ்வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன், ஆகிய மூவருக்கு தூக்குத்தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்ட நால்வருக்கும் ஆயுள்தண்டனையும் விதிக்கப்பட்டது. தூக்குத் தண்டனையை ரத்துச் செய்யக்கோரி முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேரும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பி இருந்தார்கள், இம்மனு குறித்து குடியரசுத் தலைவர் குறித்த காலத்தில் முடிவு எடுக்காமல் காலதாமதமானதாக கூறி உச்ச நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
ஜெயலலிதா அறிவிப்பு
இதனிடையே 2014ம் ஆண்டு தமிழகத்தின் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 7 பேரையும் விடுதலை செய்யப்போவதாக அறிவித்தார். இதற்காக மத்திய அரசின் கருத்தை கோரியிருந்தார். ஆனால், மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கு என்பதால், இந்த விவகாரத்தில் தாங்கள்தான் முடிவெடுக்க முடியுமென மத்திய அரசு அறிவித்தது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
இதனிடையே கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி, 7 பேரையும் விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்காக மத்திய அரசின் கருத்தை அறிய 3 நாட்கள் அவகாசம் அளித்தது. இதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு தொடர்ந்தது.
தமிழக அரசு பரிந்துரை
இந்நிலையில் ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரை விடுதலை செய்வது தொடர்பாக தமிழக ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்யலாம் என்றும் அவர்களை விடுதலை செய்ய ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்றும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவிட்டது.இதன்படி தமிழக அரசு அமைச்சரவையை கூட்டி 7 பேரை விடுதலை செய்யலாம் என பரிந்துரை அளித்தது. தமிழக அரசு பரிந்துரை செய்து 250 நாட்களுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில் அதன் மீது இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ராமதாஸ் கேள்வி
நடிகர் சஞ்சய் தத் மத்திய அரசின் ஆயுதச் சட்டத்தின்படி தான் தண்டிக்கப்பட்டார் என்பதால் அவரின் தண்டனையை குறைத்து, முன்கூட்டியே விடுதலை செய்யும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு. ஆனால், மராட்டிய மாநில அரசு, இது தொடர்பாக மத்திய அரசுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் சிறை விதிகளின் அடிப்படையில் சஞ்சய் தத்தை தன்னிச்சையாக விடுதலை செய்துள்ளது. இது நடந்து மூன்றரை ஆண்டுகள் ஆகியும் இதுவரை மத்திய அரசு தலையிடவில்லை. ஆனால் தமிழகத்தில் 7 பேர் விடுதலையின் மீது மட்டும் மத்திய அரசு அநீதியாக நடப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் புகார் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு பச்சை கொடி
இந்நிலையில் இது தொடர்பான கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலையில் ஆளுநர் நல்ல முடிவு எடுப்பார் என நம்புவதாக தெரிவித்தார். இதேபோல் பாஜக மாநிலங்களவை எம்பி இல கணேசன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.
மே 23ம் தேதிக்கு முன்
சஞ்சய் தத் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு 7 பேர் விடுதலை விவகாரத்தில் விரைந்து முடிவு எடுக்க நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அனேகமாக தேர்தல் முடிவு வரும் நாளான மே 23ம் தேதிக்குள அவர் முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. எனவே 23ம் தேதிக்கு முன்பு 7 பேர் விடுதலையானாலும் ஆச்சர்யப்படுதற்கு இல்லை.