ஊட்டியில் மருத்துவக் கல்லூரி.. 25 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு.. தமிழக அரசு தகவல்
சென்னை: ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்காக 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஊட்டியில், மெட்ராஸ் ரேஸ் கிளப்புக்கு சொந்தமான 4.5 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேல்முருகன் அடங்கிய அமர்வு, நீலகிரி மாவட்ட மக்களின் வசதிக்காக, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைத்தது குறித்தும், ஏர் ஆம்புலன்ஸ் வசதிகள் ஏற்படுத்துவது குறித்தும் பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், வேல்முருகன் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, ஊட்டியில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அமைப்பதற்கு, 25 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அக்டோபர் 11ம் தேதி அரசாணை பிறப்பித்துள்ளதாக, தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.
அண்ணா நகர் டவர் கிளப்புக்கு 31,000 சதுர அடி நிலம்.. மீட்க உத்தரவு.. தடை விதிக்க ஹைகோர்ட் மறுப்பு
அரசின் நடவடிக்கைக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள், ஏர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்துவது தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு அறிவுறுத்தி, விசாரணையை நவம்பர் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.