தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி- வழிகாட்டி நெறிமுறைகள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கோவில் திருவிழாக்களை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் கோவில் திருவிழாக்கள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளையும் அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர்வாகங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தில் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பட்டியலைச் சார்ந்த மற்றும் பட்டியலைச் சாராத திருக்கோவில்களில் அன்றாடம் நடைபெறும் பூஜைகள் மட்டுமல்லாது, திருவிழாக்கள் நடைபெறுவதும் இன்றியமையாத ஒன்றாக திகழ்ந்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயில்...கொரோனா தொற்று... அர்ச்சகர் ஒருவர் உயிரிழப்பு!!
கொரோனா கால பூஜைகள்
ஒவ்வொரு திருக்கோயிலுக்கும் குறிப்பிட்ட திருவிழாக்கள் சிறப்புடையதாகவும் பக்தர்கள் அதிக அளவில் வந்து சுவாமி/ அம்மனை தரிசனம் செய்யும் நிகழ்ச்சியாகவும் இருந்து வருகிறது. கொரோனா நுண்ணுயிர் கிருமி தாக்குதலை அடுத்து பொதுமக்கள் நலனை முன்னிட்டு திருக்கோயில்களில் அரசு வழிகாட்டுதலின்படி பக்தர்கள் தரிசனத்திற்காக இது நாள் வரை அனுமதிக்கப்படவில்லை. ஆனால் தினசரி பூஜைகள் மட்டும் அர்ச்சகர், பட்டர், பூசாரிகள் மூலம் நாளது தேதிவரை தங்குதடையின்றி நடைபெற்று வருகிறது.
கிராம கோவில்களில் வழிபாடு
தற்பொழுது அரசு வழங்கியுள்ள அறிவுரைகளின்படி கிராம பகுதிகளில் உள்ள திருக்கோயில்களில் பக்தர்கள் சமூக இடைவெளியினை கடைபிடித்தும், முகக் கவசம் அணிந்தும் கொரோனா தாக்குதலை தவிர்த்திட அரசால் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி , இதர பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைபிடித்தும் தரிசனம் செய்து வருகின்றனர்.
திருவிழா அனுமதி கோரிக்கை
இந்த நிலையில் திருக்கோவில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு அனுமதி கோரியும். மேற்படி உற்சவ திருவிழா காணொளி பதிவுகளை வலைஒளி சேனல் - Youtube Channel மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி முன்மொழிவுகள் சார்நிலை அலுவலர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன. இப்பொருண்மை தொடர்பாக பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.
திருவிழாக்கள் நடத்தலாம்
திருக்கோவில்களில் பழக்கவழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தின் அனுமதி பெற வேண்டியது இல்லை; திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்கவழக்கங்கள் படி மாறுதல் ஏதுமின்றி திருக்கோயில் வளாகத்துக்குள் நடைபெற வேண்டும். திருவிழாக்கள் திருக்கோயில்களில் சொற்ப அளவிலான திருக்கோயில் பணியாளர்களைக் கொண்டு முகக் கவசம் அணிந்தும் 6 அடி சமூக இடைவெளியை கடைபிடித்தும் நடைபெற வேண்டும். இவ்விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை.
லைவ் ஒளிபரப்பு செய்யலாம்
கொரோனா தொற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டி நெறிமுறைகளையும் கண்டிப்பாக கடைபிடித்தல் வேண்டும். திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டியிருப்பின் அவ்வனுமதியையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும். இவ்விழாக்களை பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து காணும் வகையில் வலைதள நேரடி ஒளிப்பரப்பு (Live Streaming) செய்ய நடவடிக்கை எடுக்கலாம். இவ்வாறு இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.