வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வர விரும்பினால் nonresidenttamil.org ல் பதிவு செய்க..!
சென்னை: வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் தவிக்கும் தமிழர்கள் தாயகம் திரும்புவதற்கு https://nonresidenttamil.org என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் நோய் தொற்றை தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவு 25.03.2020 அன்று முதல் அமலில் இருந்து வருகிறது. இதனால் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
இதனால், தமிழ்நாட்டைச் சேர்ந்த பல மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வெளிநாடுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள், பணியாளர்கள் உள்ளிட்டோர் நாட்டிற்கு வர இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவ்வாறு வெளிநாடுகளில் இருக்கும் தமிழர்களில், உடனடியாக தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்புகிறவர்கள் நலனுக்காகவும், அவர்களின் குடும்பத்தினரின் நலனை காத்திடும் நோக்கிலும் அவர்களது எண்ணிக்கையினை அறியும் வகையிலும்
தமிழ்நாட்டிற்குத் திரும்புகிறவர்களுக்கு தனிமைப்படுத்துதல் வசதிகள் ஏற்படுத்திடவும் அவர்களைப் பற்றிய தகவல்களை பெறுவதற்காகவும் இணைய பதிவு வசதி புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் பதிவுகள் செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர விரும்பும் தமிழர்கள் ஊதா நிற பதிவையும், வெளிமாநிலங்களில் வசித்து வரும் தமிழர்கள் சொந்த ஊர்களுக்கு வர விருப்பப்பட்டால் பச்சை நிற பதிவையும் பூர்த்தி செய்ய வேண்டும். இதே போல் தமிழகத்தில் வசிக்கக்கூடிய வெளிமாநிலத்தவர்கள அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்பினால் சிவப்பு நிற பதிவை கிளிக் செய்து அதில் தகவல்களை அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.