வடகிழக்குப் பருவமழை முன்னெச்சரிக்கை.. 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்த தமிழக அரசு
சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. சென்னை மாநகராட்சியில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள 15 மண்டலங்களுக்கு தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தென்மேற்குப் பருவமழை ஜூன் மாதம் தொடங்கியது. செப்டம்பர் இறுதிவரை தென்மேற்குப் பருவமழை காலமாகும். அக்டோபர் முதல் வடகிழக்குப் பருவமழை ஆரம்பிக்கும். டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழை நீடிக்கும்.

திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழை காலத்தில் அதிக வெள்ளம் ஏற்படும். குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து மக்கள் பாதிப்புக்கு ஆளாவார்கள். இந்த ஆண்டு ஜூன் மாதத்திலேயே திடீரென மழை கொட்டித்தீர்த்தது. பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. எனவே தமிழக முன்கூட்டியே சென்னையில் பருவமழை முன்னெச்சரிக்கை பணிகளுக்காக 15 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்குவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள ஆண்டுதோறும் மண்டல வாரியான அலுவலர்களை நியமனம் செய்யப்படுவார்கள்.
இதன்படி இந்தாண்டு சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக தமிழக அரசு நியமித்துள்ளது.
தென்மேற்குப் பருவமழை.. தமிழகத்தில் ஜில்லென்று தொடங்கியது..10 மாவட்டங்களில் மழை அடி தூள்
15 மண்டலங்களும் ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. திருவெற்றியூர் மண்டலம்: சரவண குமார் ஜவாத் மணலி மண்டலம்: கணேசன் மாதவரம் மண்டலம்: சந்தீப் நந்தூரி தண்டையார்பேட்டை மண்டலம்: வினய் ராயபுரம் மண்டலம்: விஜய கார்த்திகேயன் திரு.வி.க.நகர் மண்டலம்: ரன்ஜீத் சிங் அம்பத்தூர் மண்டலம்: சுரேஷ் குமார் அண்ணா நகர் மண்டலம்: பழனிசாமி தேனாம் பேட்டை மண்டலம்: ராஜாமணி கோடம்பாக்கம் மண்டலம்: விஜயலட்சுமி வளசரவாக்கம் மண்டலம்: மணிகண்டன் ஆலந்தூர்: நந்தகோபால் அடையாறு மண்டலம்: நிஷாந்த் கிருஷ்ணா பெருங்குடி மண்டலம்: ரவி சந்திரன் சோழிங்கநல்லூர் மண்டலம்: வீரராகவ ராவ் ஆகிய 15 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.