அடுத்தடுத்த புகார்கள்.. அண்ணா பல்கலை துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த குழு அமைத்தது தமிழக அரசு
சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகிறது. தமிழக அரசுக்கு எதிராக செயல்படுகிறார், அண்ணா பல்கலையின் எதிர்காலத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று நிறைய புகார்கள் வைக்கப்பட்டு வருகிறது.
அரியர் தேர்வில் மோசடி, சிறப்பு அந்தஸ்து கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியது என்று சூரப்பா மீது பல புகார்கள் வைக்கப்பட்டது.அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாநில அரசின் நிதி தேவையில்லை என்று இவர் கூறியது, இன்னும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவியில் இருந்து சூரப்பாவை நீக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசியல் தலைவர்கள் இவருக்கு எதிராக கொந்தளித்துள்ளனர். அதிமுக தலைவர்களும் சூரப்பாவிற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சூரப்பா மீது விசாரணை நடத்த தமிழக அரசு குழு ஒன்றை அமைத்துள்ளது.
சூரப்பாவிற்கு எதிரான புகார்களை விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் 3 மாதங்களில் இந்த குழு விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும். சூரப்பா தமிழக அரசுக்கும், பல்கலை எதிர்காலத்திற்கும் எதிராக செயல்பட்டாரா என்று விசாரணை செய்யப்படும்.