வேளாண் மண்டல அறிவிப்பு... சட்டமாக இயற்ற முதல்வர் தீவிர ஆலோசனை
Recommended Video
சென்னை: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததை சட்டமாக இயற்றுவதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
நாளை மாலை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டு ஒருமித்த கருத்தின் அடிப்படையில் முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. அதன் பின்னர் பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான நாளை மறுதினம் வியாழக்கிழமை அன்று வேளாண் மண்டலம் சட்டம் இயற்றப்படும் எனக் கூறப்படுகிறது. இதன் மூலம் டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் மக்கள் மத்தியில் அரசுக்கு நற்பெயர் ஏற்படுவதோடு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் வாயை அடைக்க முடியும் என்பது முதல்வரின் நம்பிக்கையாக உள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக கடந்த வாரம் சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் அறிவித்தார். இந்த அறிவிப்பு டெல்டா மாவட்ட விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகளின் வரவேற்பை பெற்றது. திமுக, மதிமுக மட்டும் முதல்வரை பாராட்டவில்லை, முதல்வரின் அறிவிப்பு கானல் நீராகிவிடக்கூடாது என அந்த இரண்டு கட்சிகளின் தலைமையும் கூறியும். காங்கிரஸ் சார்பில் கூட முதல்வரின் அறிவிப்பை வரவேற்பதாக அறிக்கை வெளியிடப்பட்டது. விவசாய சங்க பிரதிநிதிகள் முதல்வரை சந்தித்து நன்றி கூறியதோடு, இதனை சட்டமாக கொண்டு வாருங்கள் என கோரிக்கை வைத்தனர்.
திமுகவும் இதே கோரிக்கையை தான் முதல்வர் அறிவிப்பு வெளியாகிய நாளில் இருந்து வைத்து வருகிறது. தேர்தலை மனதில் வைத்து டெல்டா மாவட்ட விவசாயிகளை முதல்வர் ஏமாற்றி நாடகம் ஆடி வருவதாக ஸ்டாலின் அனைத்து மேடைகளிலும் சாடினார். முதலமைச்சருக்கு உண்மையிலேயே டெல்டா விவசாயிகள் மீது அக்கறையிருந்தால் வேளாண் மண்டலம் சட்டம் கொண்டு வந்து அதை மத்திய அரசு ஒப்புதல் பெற்று உடனடியாக அதை நடைமுறை படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார்.
ஏற்கனவே குடியுரிமை சட்டம் விவகாரத்தில் இஸ்லாமியர்களின் கடும் அதிருப்திக்கு ஆளாகியுள்ள தமிழக அரசு, வேளாண் மண்டலம் விவகாரத்திலும் அஜாக்கிரதையாக இருக்க வேண்டாம் என அமைச்சர்கள் சிலர் முதல்வருக்கு எடுத்துக்கூறியுள்ளனர். இதையடுத்து நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரிலேயே வேளாண் மண்டலம் சட்டம் இயற்றுவது பற்றி முதல்வர் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளோடு ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்த சூழலில் நாளை அமைச்சரவை கூட்டமும் நடக்க உள்ளதால் அதில் வேளாண் மண்டலம் சட்டம் தொடர்பாக முக்கிய முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது. மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் பற்றியும் அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.