மத்திய அரசு 2000.. மாநில அரசும் 2000.. ஆக மொத்தம் 4000.. இது செம பிளானா இருக்கே!
சென்னை: மத்திய அரசு ஒரு பக்கம் ரூ. 20000 பணத்தைக் கொடுத்தால், மாநில அரசும் தன் பங்குக்கு 2000 கொடுத்து அசத்தி வருகிறது. இதனைப் பெறும் மக்களை பாஜகவினரும், அதிமுகவினரும் அணுகி வாக்கு சேகரிக்கும் பலே திட்டத்துடன் உள்ளதாக கூறப்படுகிறது.
இம்மாதம் 1 –ம் தேதி அறிவிக்கப்பட்ட மத்திய பட்ஜெட்டில் 2 ஹெக்டேர் நிலப்பரப்புக்கு குறைவாக வைத்திருக்கும் விவசாயிகள் அனைவருக்கும் ஆண்டிற்கு ரூ. 6000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அடுத்த நிதியாண்டு முதல் அமலுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த டிசம்பர் 1-ம் தேதி முதல் முன்தேதியிட்டு அமல் படுத்தப் பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட ரூ.6000 தொகையை மூன்று தவணையாக பிரித்து கொடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி உதவி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை தமிழகத்தில் செயலப்டுத்துவதற்கான அரசாணை வெளியிடப்பட்டு பயனாளிகளை தேர்வு செய்யும் பணியும் துவங்கிவிட்டது. பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை என்ற பெயரில் வழங்கப்படும் இந்த உதவித் தொகையை பெற முதற்கட்டமாக 75 லட்சம் பயனாளிகள் அடையாளம் காணப்பட உள்ளனர். இதற்காக கஜா புயலை விட வேகமாக பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கின்றன.
ஐஏஎஸ் அதிகாரிகள் குழு
இதற்காக 12 ஐ ஏ எஸ் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் முதல் வரும் மார்ச் வரையிலான காலத்திற்கான தவணையாக இந்த தொகை வழங்கப்பட உள்ளது. இது மத்திய அரசின் சார்பில் வழங்கப்படும் நிதி என்றால் மாநில அரசும் தனது பங்கிற்கு அடுத்த அதிரடியை காண்பிக்க உள்ளது.
முதலமைச்சர் பழனிசாமி
தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி விதி எண் 110 கீழ் அறிவித்த அறிவிப்பின்படி வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பயனாளிகளுக்கு ரூ.2000 வீதம் வழங்கப்பட உள்ளது. இதற்கான பயானாளிகளை அடையாளம் காணும் பணியும் வேகம் எடுத்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இந்தப் பணம் பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப் பட்டுவிடும். ஆக மொத்தம் ஒரு கோடியே 35 லட்சம் பயனாளிகளுக்கு குறைந்த பட்சம் ரூ. 2000 வழங்கப்பட்டு விடும்.
முதற்கட்ட தொகை
அதுபோல மத்திய அரசு வழங்க உள்ள முதற்கட்ட தொகையான ரூ. 2000 திற்கான பயனாளிகளை அடையாளம் காண தமிழக அதிகாரிகளும் பல்வேறு செயல்திட்டங்களை செயல்படுத்த உள்ளனராம். ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே சிறு குறு விவசாயிகளின் பட்டியல் இருக்கும். அந்தப் பட்டியலின்படி பிரதம மந்திரியின் கவுரவ ஊக்கத்தொகை பெறுவதற்கான பயனாளிகளை அடையாளம் கண்டு அவர்களிடம் குறிப்பிட்ட விவரங்களோடு ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம் போண்றவற்றில் ஏதாவது ஒரு அடையாளத்தோடு விண்ணப்பிக்க வேண்டுவனவற்றை செய்வதற்காக ஒரு படையே களத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக - பாஜகவினர்
இதை வைத்துதான் அதிமுக மற்றும் பாஜகவினர் பலே பிளானோடு தேர்தல் களத்தில் குதிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது இந்த பணம் கொடுக்கப்பட்ட உடனே இந்தப் பயனாளிகளை அணுகி அடுத்தடுத்த தவணைகளில் உங்களுக்கு பணம் கிடைக்க வேண்டுமென்றால் அதிமுக பாஜக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என்று கேட்பதற்கு பிரச்சாரக் குழுக்களும் தயார் நிலையில் உள்ளனராம்.