ஒகி போய் ஒரு வருடமாகி விட்டது.. இன்னும் முழுசா வராத நிவாரணம்.. குமுறலில் குமரி!
ஓகி புயல் நிவாரண நிதி இன்னும் மக்களுக்கு போய் சேரவில்லை
சென்னை: என்னத்த சொல்றது? அடித்து நாசம் செய்து விட்டு போன ஒகி புயல் போய் ஒரு வருஷம் ஆகியும் நிவாரண நிதியே இன்னும் மக்களுக்கு வந்து சேரவில்லை என்று மக்கள் குமுறி குமுறி கொட்டி அழுகிறார்கள்.
போன வருஷம் இதே நவம்பர் இறுதிதான்... வங்காள விரிகுடா கடலில் சைலன்டாக வந்த ஒகி புயலானது நம்மை மட்டுமில்லை, கேரளா மற்றும் லட்ச தீவுகள் உட்பட ஒட்டுமொத்தமாக தாக்கியது. அதன் சேதங்களை சொல்லி மாளாது.
கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் எத்தனையோ பேர் கரைதிரும்ப முடியாமல் தவித்தனர். நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள் வற்றி காடு தெரியவே மாதங்களானது.
ஆலோசனை
புயல் பாதிக்கப்பட்டதில் முக்கிய இடமான லட்சத் தீவுகள், திருவனந்தபுரம், கன்னியாகுமரி இங்கெல்லாம் பிரதமர் வந்தார்... நேரில் போய் பார்த்தார். அந்தந்த மாநில அரசுகளுடன் ஆலோசனையும் நடத்தினார். வீசிய சூறாவளி காற்றால், 15 ஆயிரத்துக்கும் மேல் மின் கம்பங்கள் சாய்ந்தன. 1,160 கி.மீ.,க்கு கம்பிகள் அறுந்து விழுந்தன. மின் வாரியத்திற்கு மட்டும் 238 கோடி ரூபாய் மதிப்பிற்கு இழப்பு ஏற்பட்டதாக கூறி அதிகாரிகள் டெல்லிக்கு போனார்கள்.
ஏக்கர் கணக்கில் நிலங்கள்
ஆனால் இதைவிட கொடுமை, மீன்பிடிக்க சென்ற 500-க்கும் மேற்பட்ட மீனவர்களின் கதி என்னவென்றே தெரியவில்லை. குமரி மாவட்டத்தில் மட்டும் சுமார் 7000 வீடுகள்,லட்சக்கணக்கான மரங்கள், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் இழந்து தவிக்கும் சூழல் உருவானது.
உயிர் பறிபோனது
ஆனால் ஒட்டுமொத்த மாவட்ட மக்களும் மத்திய, மாநில அரசுகளைதான் குற்றம் சொன்னார்கள். எங்களுக்கு இப்படி ஒரு புயல் வருவது குறித்து முன்னமேயே சொல்லவில்ல. ரொம்ப அலட்சியமாக இருந்துவிட்டார்கள். அதனால்தான் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழக்க காரணம் என்கிறார்கள். ஆனால் இதனை இரு அரசுகளும் மறுத்தன... இதற்காக உண்மை அறியும் குழுவும் அமைக்கப்பட்டது. என்ன பிரயோஜனம்? போன உயிர் போனதுதானே??
போய் சேரவில்லை
மத்திய அரசு தமிழகத்திற்கான ஓகி புயல் இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை ஒதுக்கியது. ஆனால் புயல் அடித்து ஓய்ந்து, அடுத்த புயலும் வந்துவிட்டது. அந்த நிவாரண நிதி இன்னும் போய் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக சேரவில்லை என்கிறார்கள்.
தூக்கில் தொங்கினார்கள்
தமிழகம் என்றாலே தொடர்ந்து வஞ்சித்து வரும் போக்கை கையாண்டு வருவதே மத்திய அரசு பிழைப்பாகி விட்டது. அது புயல் அடிச்சு எத்தனை பேர் இறந்தாலும் சரி, வெயில் அடித்து பயிர் கருகி தூக்கில் தொங்கினாலும் சரி... நிவாரணம் என்பது மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்துக்கு வெறும் மருந்துதான். இதோ இப்போது காவிரி டெல்டா கஜா புயலில் சிக்கி சுடுகாடாகியிருக்கிறது.. மத்திய அரசு இன்னும் வாயே திறக்காமல் உள்ளது.